தவெக மகளிரணி பெயரில் ரீல்ஸ்; தேனி மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை
விதிகளை மீறும் தவெகவினருக்கு எதிராக கட்சியின் சார்பில் தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Published : May 28, 2026 at 5:47 PM IST
தேனி: தவெக பெயரைப் பயன்படுத்தி எந்தவொரு அரசு அலுவலகங்களையோ அல்லது தனியார் நிறுவனங்களையோ அணுகக்கூடாது என்று தேனி மாவட்டச் செயலாளர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேனி மாவட்டம், தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகியாக இருப்பவர் அஜிதா தெய்வேந்திரன். இவர் தன்னை தேனி வடக்கு மாவட்ட மகளிரணி தலைமை எனக் கூறி அரசு அலுவலகங்களுக்குச் சென்று அதிகாரிகளை சந்தித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியருடன் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக ரீல்ஸ் பதிவிடுவது, மகளிர் குழு சந்திப்பு, விவசாய சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகளைக் கேட்டு அறிந்து அதனையும் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் பதிவிடுவதில் தீவிரம் காட்டி வருகிறார் அஜிதா தெய்வேந்திரன். ரீல்ஸ் பதிவிடும்போது தவெக தலைமையை டேக் செய்கிறார்.
மேலும் தேனி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏக்களின் ஆய்வின் போது அவர்களுடன் சென்று ஆய்வு செய்தது போல் அதையும் ரீல்ஸாக பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் மக்கள் பிரதிநிதி இல்லாத தமிழக வெற்றிக் கழக கட்சியினர் அரசு அலுவலகங்களுக்குள் சென்று ஆய்வு நடத்துவது என புகார்கள் தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கும் நிலையில் தேனியிலும் இதுபோன்று சர்ச்சை கிளம்பியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தவெக மகளிரணி தலைமை என்று யாரையும் நியமிக்கப்படவில்லை என்றும், கட்சிப் பெயரைக் கூறியும் அரசு அலுவலகங்களுக்குள் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் பிரகாஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
| இதையும் படிங்க: டெல்லியிலிருந்து சென்னை திரும்பினார் முதலமைச்சர் விஜய்; சோனியா, ராகுலை சந்திக்கவில்லை |
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக வெற்றிக் கழக தேனி வடக்கு மாவட்டத்திலிருந்து மாவட்ட மகளிர் அணி என்று யாருக்கும் பொறுப்பு வழங்கப்படவில்லை. மாவட்ட மகளிரணியினர் என்றும் மற்றும் நிர்வாகிகள் என்றும் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி எந்த அரசு அலுவலகங்களையோ அல்லது தனியார் நிறுவனங்களையோ அணுகக் கூடாது என கட்சியின் சார்பில் எச்சரிக்கப்படுகிறது.
மேலும், கட்சியின் பெயர் மற்றும் பொறுப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவது கடுமையான ஒழுங்கு மீறலாக கருதப்படும். விதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக கட்சியின் சார்பில் தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

