அரசின் இணை நிர்வாகத்தை ஆளுநர் மாளிகை நடத்த முடியாது - சு.வெங்கடேசன் திட்டவட்டம்
வைகை ஆற்றை புனரமைப்பு செய்யவில்லை என ஆளுநர் எப்படி கேள்வி எழுப்ப முடியும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Published : July 3, 2026 at 10:01 PM IST
மதுரை: அரசின் இணை நிர்வாகத்தை ஆளுநர் மாளிகை நடத்த முடியாது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "ஆய்வுக்கூட்டத்தில் அனைத்து திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தினோம். இதில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ஒன்றிய, மாநில அரசின் ஒருங்கிணைப்புகள் தேவைப்படுகிறது. இதுவரை இணைப்பு சாலை இல்லாத கிராமத்திற்கான ஒன்றிய அரசின் திட்டத்திற்கான நிதிகள் மதுரை உள்பட தமிழகம் முழுவதும் பயன்படுத்தவில்லை. இதனால் அந்த திட்ட நிதிகள் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு செல்கிறது.
RAM -G திட்டத்தின் கீழ் மனித ஊதியத்தில் 60 ஒன்றிய அரசும், 40% மாநில அரசு வழங்க வேண்டும் என்பது மாநில அரசை பாதிக்கும். அரசரடி ரயில்வே மைதானம் ரயில்வே துறைக்கு சொந்தமானது அல்ல. அது வருவாய்த்துறைக்கு சொந்தமான இடம். அதை ரயில்வே துறை ஆக்கிரமித்துள்ளது. தற்போது அங்கு வாக்கிங் கட்டணம், வாகன கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். அந்த இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மதுரை மாவட்டத்தில் நகர்புறத்தை விட கிராம புறங்களில் சில மாதங்களில் போக்சோ வழக்குகள் இரு மடங்கு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ‘ஆய்வுக்கூட்டம்’ என ஆளுநர் அழைத்தால் செல்லக்கூடாது - அதிகாரிகளுக்கு சு. வெங்கடேசன், நிர்மல் குமார் எச்சரிக்கை
வைகை ஆற்றை கடந்தவுடன் தண்ணீர் இல்லை என தமிழக ஆளுநர் கேட்டுள்ளார். அரசு ஆய்வு கூட்டத்தை பற்றி பொதுவெளியில் விவாதிக்க முடியாது. ஆனால், வைகை ஆற்றை புனரமைப்பு செய்யவில்லை என ஆளுநர் எப்படி கேட்டார்? நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது அதில் தலையிடுவேன் என்று அவர் கூறுவாரா?
மதுரை எய்ம்ஸ் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. இதனால் எய்ம்ஸ் பணிகளில் ஆளுநர் தலையிடுவாரா? அரசின் இணை நிர்வாகத்தை ஆளுநர் மாளிகை நடத்த முடியாது. வைகை ஆற்றை தூர்வாறுவதை மக்கள் இயக்கமாக எடுத்துசெல்வோம்" என்று சு.வெங்கடேசன் பேசினார்.
ஆளுநர் மாளிகை எதை செய்யுமோ அதை மட்டும் செய்தால் போதும்
அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, " நமது ஆட்சி தொடங்கியவுடன் வைகையை தூர் வருவதற்கான பணிகள் உடனடியாக துவக்கப்பட்டது. ஒன்றிய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு இரண்டு வாரங்கள் ஆகியும் இதுவரைக்கும் அனுமதி வரவில்லை. வைகை அணையை தூர்வார தவெக அரசு தேவையான விஷயத்தை விரைவாக செய்கிறது ; ஒன்றிய அரசு அனுமதி வந்தவுடன் இப்பணியை தொடங்குவோம்.
மாறாக இப்பணிக்கு ஆளுநர் சுற்றுச்சூழல் அனுமதி வாங்குவாரா? மண்வெட்டியை கையில் எடுத்து தூர்வாருவாரா? நீர்வளத் துறை அதிகாரியிடம் அனுமதி பெற்று உத்தரவு வாங்குவாரா? ஆளுநர் எங்கேயும் களம் இறங்க முடியாது. வைகையில் தூர் வாருவதற்கு எப்படி அவர் போய் ஒப்பந்ததாரரை கூப்பிடுவாரா? லாரிகளை எடுத்து போய் தூர்வாருவாரா?
ஆளுநர் மாளிகை எதை செய்யுமோ அதை மட்டும் செய்தால் போதும். தேவையில்லாமல் குழப்பம் விளைவிக்கும் எந்த வேலையும் ஆளுநர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அரசு தேவையான நடவடிக்கைகளை எல்லா விதத்திலும் எடுத்துக்கொண்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசில் தலையிடும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது" என்றார்.

