''நெல் மூட்டைகளை பாதுகாக்காமல் 'நானும் டெல்டாக்காரன்' என்பதில் என்ன இருக்கிறது?'' - பிரேமலதா விஜயகாந்த்!
டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகளை பாதுகாக்க முடியாத நிலையில் இருப்பது மிகுந்த வலியை கொடுப்பதாக பிரேமலதா விஜயகாந்த் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

Published : October 18, 2025 at 7:36 PM IST
|Updated : October 18, 2025 at 8:15 PM IST
சென்னை: நெல் மூட்டைகளை பாதுகாக்காமல் 'நானும் டெல்டாக்காரன்' என முதல்வர் பெருமைப்படுவதில் என்ன இருக்கிறது? என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் தனது பிறந்தநாள் மற்றும் தீபாவளியை முன்னிட்டு 'வள்ளல் விஜயகாந்த் நினைவக அன்னதான அறக்கட்டளை'-க்கு 1000 அரிசி முட்டைகளை அன்பளிப்பாக வழங்கினார்.
சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் சுதீஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதன் பின்னர் ஏ.சி. சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ''அதிமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருவார்கள். யார் என்று இப்போது சொல்ல முடியாது. 2026 தேர்தல் மும்முனை போட்டியாகவும் இருக்கலாம். இருமுனை போட்டியாகவும் இருக்கலாம். இது ஒரு விசித்திரமான தேர்தல். இந்த முறை சட்டமன்ற விவாதம் காரசாரமான ஒன்றாக இருந்தது. ஆரோக்கியமானதாக இருந்தது" என்றார்.
இதனை தொடர்ந்து பிரேமலதா விஜகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''கூட்டணி குறித்து ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டில் அறிவிப்போம். உருட்டு கடை அல்வா என்று அதிமுக கையில் எடுத்துள்ள பரப்புரை அரசியலில் வழக்கமாக நடக்கும் விஷயம் தான். எதாவது வார்த்தைகளை பயன்படுத்தி எதிர்க்கட்சி ஆளும் கட்சியை விமர்சிப்பதும், ஆளும் கட்சி அதற்கு பதிலடி தருவதும், அரசியலில் நடப்பது வாடிக்கை தான். அதிமுகவின் இந்த விமர்சனத்துக்கு திமுக பதில் கொடுத்து இருக்கிறார்கள்.
டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகளை மழையில் பாதுகாக்க முடியாத நிலை என்பது மிகுந்த வலியை கொடுக்கிறது. விவசாயிகளின் உழைப்பு சாலைகளில் கொட்டப்பட்டுள்ளது. நெல்லை பாதுகாக்க, ஏன் தமிழக அரசால் நெல் கிடங்கை உருவாக்க முடியவில்லை?
நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க முடியவில்லை என்றால், நானும் டெல்டாக்காரன் தான் என்று பெருமை பட என்ன இருக்கிறது? நெல் முளைவிட்டு பயனில்லாமல் உள்ளது. அரசு உரிய தீர்வு கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நிவாரணம் கொடுத்து விவசாயிகளை காப்பது அரசின் கடமை.
| இதையும் படிங்க: கிரீன்வேஸ் சாலை - மந்தைவெளி இடையே சுரங்கப்பாதை பணி நிறைவு; சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு! |
மழையால் பாதிக்கப்படும் மக்கள் தேமுதிக அலுவகத்தில் உள்ள ஹாலில் தங்கிக்கொள்ளலாம். அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்குவோம். தேவையானவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்" என தெரிவித்தார்.

