வாகனங்களில் இருந்து ''பிரஸ், போலீஸ், வழக்கறிஞர்'' ஸ்டிக்கர்கள் அகற்றம்; பள்ளிக்கரணை உதவி ஆணையர் அதிரடி
இது போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி சமூகத்தில் தவறான காரியங்களில் ஈடுபடுவது, காவல்துறையினரிடம் இருந்து தப்பி செல்லவும் பயன்படுத்துகின்றனர் என போக்குவரத்து உதவி ஆணையர் சுந்தர்ராஜன், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் தெரிவித்தார்.

Published : December 15, 2025 at 8:11 PM IST
சென்னை: சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் போக்குவரத்து காவல் துறையினர், ''போலீஸ், பிரஸ், வழக்கறிஞர், மருத்துவர், ஆர்மி'' என்று ஸ்டிக்கர் ஒட்டியிருந்த வாகனங்களை திடீரென மடக்கி இன்று சோதனையில் ஈடுட்டனர். அப்போது அந்த வாகனங்களில் யாரும் குறிப்பிட்ட துறையை சார்ந்த நபர்கள் இல்லையென தெரிய வந்ததால் ஸ்டிக்கர்களை அகற்றி அனுப்பி வைத்தனர்.
சென்னை ஓஎம்ஆர் சாலை, காரப்பாக்கத்தில் பள்ளிக்கரணை போக்குவரத்து உதவி ஆணையர் சுந்தர்ராஜன் மற்றும் செம்மஞ்சேரி போக்குவரத்து காவல் நிலைய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த வாகனங்களில் சிலர் போலீஸ், பிரஸ், வழக்கறிஞர், மருத்துவர், ஆர்மி என்று ஸ்டிக்கர் ஒட்டியிருந்தனர். இதனைக் கண்ட காவல் துறையினர் அவர்களை மடக்கி சோதனையிட்டனர். அந்த வாகனங்களில் வந்த யாரும் குறிப்பிட்ட துறையை சார்ந்த நபர்கள் இல்லையென தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களுக்கு அறிவுரை கூறிய போலீசார் இது போன்ற ஸ்டிக்கர்களை இனி ஒட்டக் கூடாது என கூறி அதனை பிரித்து அகற்றினர். மேலும், சிலரிடம் உறவினர்கள் அந்தந்த துறையில் இருந்தால், அவர்கள் இருக்கும் போது தான் ஸ்டிக்கர் இருக்க ஒட்டி வேண்டும் என்றும் தெரிவித்தனர். இவர்களில் சிலர் வாகனங்களில் இருந்து ஸ்டிக்கரை பிரிக்கக் கூடாது என காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போக்குவரத்து உதவி ஆணையர் சுந்தர்ராஜன் கூறுகையில், ''இது போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி சமூகத்தில் தவறான காரியங்களில் ஈடுபடுவது, காவல்துறையினரிடம் இருந்து தப்பி செல்லவும் பயன்படுத்துகின்றனர். எனவே இது போன்ற போலி ஸ்டிக்கர்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தாம்பரம் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மாதம் ரூ.2 லட்சம் வரை வருமானம்; சுடுமண் கைவினைக் கலையில் அசத்தும் திருநங்கை
இதையும் படிங்க: ஊதியம் கொடுபடா சான்று வழங்க ரூ.1500 லஞ்சம் - வட்டார கல்வி அலுவலர் கைது
இதனைத் தொடர்ந்து நாங்கள் (போக்குவரத்து காவல் துறையினர்) தற்போது பழைய மகாபலிபுரம் சாலையில் இன்று முதல் சோதனையை ஆரம்பித்துள்ளோம். இதற்கு பின்னர் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பல்வேறு முக்கிய இடங்களில் இது போல் சோதனை செய்ய உள்ளோம்'' என தெரிவித்தார்.

