நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: திமுக கவுன்சிலரை தட்டி தூட்டிய போலீஸ்
குற்றம் சாட்டப்பட்ட இருவரும், பிப்ரவரி 26-ஆம் தேதி மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.


Published : March 3, 2026 at 2:08 PM IST
சென்னை: நடுவானில் விமானப் பணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக கவுன்சிலர் உள்பட இருவரை மீனம்பாக்கம் மகளிர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி மாலை நான்கு மணி அளவில், சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து தனியார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் டெல்லி புறப்பட்டு சென்றது. அப்போது அந்த விமானத்தில் இருந்த இரண்டு ஆண் பயணிகள் மது போதையில் விமான பணிப் பெண்ணிடம் பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், விமான இருக்கையில் அமராமல் எழுந்து நின்று கொண்டு விமானப் பணிப்பெண் ஒருவரிடம் உனது சொந்த ஊர் என்ன என்று கேட்டுள்ளனர். அதற்கு, விமான பணிப் பெண் மதுரை என்று கூறியதும் ஆண்டிபட்டியா? கல்லுப்பட்டியா? என்று கேட்டு கிண்டல் செய்து சிரித்துள்ளனர்.
அதன் பின்னர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பணியின் நிமித்தம் அந்த இரண்டு பேர் இருந்த பகுதிக்கு விமான பணிப்பெண் சென்ற போது, பணிப்பெண்ணின் பின்பக்க இடது தோள்பட்டையில் கைகளை வைத்து அழுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த விமான பணிப்பெண் அதிர்ச்சிடைந்து அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், மறுநாள் பிப்ரவரி 26 ஆம் தேதி தனியார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்ததும், விமான பணிப்பெண் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள அனைத்து மகளிர் அவள் நிலையத்தில், விமானத்தில் தனக்கு நடந்த துயரம் குறித்து முறைப்படி புகார் செய்துள்ளார்.
மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், பணிப்பெண்ணின் புகாரை பெற்றுக் கொண்டு அந்த இரண்டு நபர்கள் விமானத்தில் அமர்ந்திருந்த இருக்கைகளை வைத்து அவர்களின் பெயர்களை ஆய்வு செய்துள்ளார்.
அப்போது அவர்களில் ஒருவர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க கவுன்சிலர் பிரபாகரன் (36) என்றும், மற்றொருவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் வழக்கறிஞர் தியாகு (36) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், இருவர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் மற்றும் விமான பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்தனர்.
இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட இருவரும், பிப்ரவரி 26-ஆம் தேதி மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வந்த தனியார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், திமுக கவுன்சிலர் பிரபாகரன், வழக்கறிஞர் தியாகு ஆகியோர் வந்து இறங்கினர். இது குறித்து முன் கூட்டியே தகவல் அறிந்து விமான நிலையத்தில் காத்திருந்த காவல் துறையினர், இருவரையும் கைது செய்து மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் விசாரணைக்கு பின்பு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

