சாலையில் தனியாக சென்ற இளம்பெண்ணை ரூமிற்கு அழைத்த நபர் கைது
இளம்பெண்ணிடம் சாலையில் ஆபாசமாக பேசிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Published : May 2, 2026 at 10:41 PM IST
சென்னை: சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி ரூமூக்கு அழைத்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை திருமங்கலம் பாடி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (29). இவர் போட்டோகிராபர் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 30) அண்ணா நகர் சாந்தி காலனி வழியாக மாலை நேரத்தில் இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக காரில் வந்த மகேஸ்வரன் அந்த பெண்ணை பார்த்துள்ளார். உடனே காரை ஓரமாக நிறுத்தி அந்த இளம்பெண்ணிடம், ’நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. வாங்களேன் ஜாலியா பேசிக்கிட்டு ரூமுக்கு போகலாம்’ என அழைத்துள்ளார்.
இதனைக் கேட்டுப் பதறிப்போன அந்த இளம்பெண் உடனடியாக காவல் கட்டுப்பாட்டறைக்குத் தொடர்பு கொண்டார். போலீசாரை அழைப்பதைத் தெரிந்து கொண்ட மகேஸ்வரன் உடனடியாக தனது காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.
அங்கிருந்து அவர் நழுவுவதைப் பார்த்த அந்த பெண் உடனடியாக அந்த காரினுடைய பதிவு எண்ணை குறித்துக் கொண்டு அதனைக்கொண்டு போலீஸில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் போலீசார் மகேஸ்வரன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மகேஸ்வரன் மீது நொளம்பூர் காவல் நிலையத்தில் ஏற்கெனவே ஒரு அடிதடி வழக்கு இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில், பெண்ணை பின்தொடர்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட மூன்று பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரனை அண்ணா நகர் போலீசார் சிறையில் அடைத்தனர். சென்னையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் ஆபாசமாகப் பேசி இளைஞர் ரூமுக்கு அழைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

