''பட்டப்பகலில் ரயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு'' - தட்டித் தூக்கியதும் கதறி அழுத இளைஞர்!
செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தபோது தன்னை விட்டுவிடுமாறும், கடனுக்காக இப்படி செய்ததாகவும் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

Published : November 9, 2025 at 9:45 PM IST
திருப்பத்தூர்: ரயிலில் பயணித்த பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் உள்ளிட்ட இருவரை சில மணி நேரத்தில் போலீசார் பிடித்து கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், விஷமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நதியா (27). பெங்களூருவில் உள்ள தனது உறவினரை பார்த்துவிட்டு, நேற்று (நவ.8) பெங்களூரு டூ ஜோலார்பேட்டை பயணிகள் ரயிலில் வந்துள்ளார். ஜோலார்பேட்டை சந்திப்பிற்கு வரும் முன்பாக சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் நின்றபோது அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்கள் திடீரென நதியாவின் கழுத்திலிருந்த 1 சவரன் தங்க செயினை பறித்துள்ளனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவத்தில் நதியா சுதாரிப்பதற்குள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியதாகத் தெரிகிறது. அதனால், செய்வதறியாது தவித்த நதியா ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் உடனடியாக ரோந்து பணியில் இருந்த மற்ற போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கையும்களவுமாக பிடித்தனர். அதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பங்காருபேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் பத்தாம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு திருடுவதை தொழிலாக ஆரம்பித்துள்ளார். அப்போது, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (30) வேலைக்கு சரியாக செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை, பணம் எல்லாம் பெரிய விசயம் இல்லை என்று கூறிய அச்சிறுவன் இளைஞரை திருட்டில் ஈடுபடுத்தியுள்ளார்.
அதன்படி கடந்த மாதம் ஒரு திருட்டு சம்பவத்தை வெற்றிகரமாக செய்த அவர்கள் நகையை அடகு வைத்து ஜாலியாக செலவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடனால் தவித்து வந்த சதீஷ் திருட்டு சம்பவத்தை செய்யலாம் என்று நேற்று சிறுவனை அழைத்து சென்றதாகவும், பங்காருபேட்டையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ரயிலில் ஏறி பெண் கழுத்திலிருந்த நகையை நோட்டமிட்டு பறித்து சென்றதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 2 தங்க செயின்களை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து சிறுவனை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்துனர். முன்னதாக சதீஷ் சிறைக்கு செல்லும் முன்பு “கடனுக்காக இப்படி செய்துவிட்டேன். இனிமேல் இப்படி செய்யமாட்டேன். என்னை விட்டுவிடுங்கள்” என்று கதறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார், ‘தவறு செய்ய வேண்டியது... பின்னர் இங்கு வந்து கெஞ்ச வேண்டியது’ என ரெண்டு தட்டுத்தட்டி அவரை சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

