சென்னையில் 61 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்; பீகார் இளைஞர்கள் இருவர் கைது
மூதாட்டியை வன்கொடுமை செய்த சம்பவம், சென்னை மக்களிடையே கடும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Published : May 28, 2026 at 7:16 PM IST
சென்னை: 61 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த பீகார் இளைஞர்கள் இருவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வருபவர் மனநலம் பாதிக்கப்பட்ட 61 வயது மூதாட்டி. இவர் அடிக்கடி வீட்டைவிட்டு வெளியேறுவதும், பிறகு சில நாட்கள் கழித்து வீட்டு வருவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், நேற்று (மே 27) பிற்பகலில் மூதாட்டி வேளச்சேரி பேருந்து நிலையம், மாநகராட்சி பூங்கா ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளார். பின்னர் மாநகராட்சி பூங்கா அருகே அமர்ந்திருந்துள்ளார்.
அப்போது, உணவகங்களில் பணிபுரியும் பீகாரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அவ்வழியே சென்றுள்ளனர். மதுபோதையில் இருந்த இளைஞர்கள், மூதாட்டியை வன்கொடுமை செய்து தப்பி ஓடி உள்ளனர். இதில் காயமடைந்த மூதாட்டி அழுதபடி அங்கேயே இருந்துள்ளார். அப்போது அந்த வழியாகச் சென்றவர்கள், மூதாட்டி அழுவதைப் பார்த்து வேளச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து, விரைந்து வந்த வேளச்சேரி காவல்துறையினர், மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸை வரவழைத்து முதலுதவி சிகிச்சைக்காக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் தொடர்ச்சியாக, மூதாட்டி சென்னை எழும்பூரில் உள்ள தாய் சேய் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை உறுதிப்படுத்தினர்.
தற்போது மூதாட்டி நலமாக இருப்பதாக மருத்துவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வேளச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மூதாட்டிக்கு இரண்டு மகன்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
அத்துடன் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வுச் செய்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இதைத் தொடர்ந்து, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மதப், ஆதில் ஆகிய இரண்டு இளைஞர்களையும் காவல்துறையினர் அதிரடி கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
61 வயதான மூதாட்டியை இளைஞர்கள் வன்கொடுமை செய்த சம்பவம், சென்னை மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

