தமிழ்நாட்டில் கோயில்களுக்குள் யார் வேண்டுமானாலும் போகலாம்: ஜெகத்ரட்சகன் எம்.பி.
ஜனாதிபதி ஊரிலேயே கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை, ஆனால் தமிழ்நாடு அப்படி இல்லை என எம்.பி. ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார்.

Published : February 24, 2026 at 3:18 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்குள் யார் வேண்டுமானாலும் போகலாம், தொட்டு சாமி கும்பிடலாம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தெரிவித்தார்.
சென்னை சோழிங்கநல்லூரில் சட்டமன்ற உறுப்பினர் எஸ். அரவிந்த ரமேஷ் தலைமையில் 'தமிழ்நாடு தலை குனியாது 'திமுக 5 ஆண்டு ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "திமுக கரோனா எனும் கொடிய நோய் பரவி வந்த நேரத்தில் ஆட்சியில் வந்தோம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் தீவிரமாக பணியாற்றினர். இதனால் கரோனா உயிரிழப்புகள் தமிழ்நாட்டில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அதனை தொடர்ந்து திராவிட மாடல் அரசு எனும் பெருமிதத்துடன் மனிதாபிமான அடிபடையில் தாய் தந்தை இல்லா குழந்தைகளுக்கு மாதம் மாதம் 2 ஆயிரம், கல்வியில் சிறக்க காலையில் சிற்றுண்டி, துய்மைப் பணியாளர்களுக்கும் சிற்றுண்டி, தமிழகத்தில் ஊர் பெயரில் ஜாதி கூடாது என காலனி எனும் சொல் அகற்றம் செய்து நல்லாட்சி செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
இதையும் படிங்க: |
ஆனால் வட மாநிலங்களில் இன்றளவும் ஜாதி மறுப்பு திருமணம் செய்தால் அந்த ஜோடியை சித்திரவதை செய்து ரசிக்கும் மன நிலை நீடிக்கிறது. ஜனாதிபதி ஊரிலேயே கோயிலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதிக்கவில்லை, பிரதமர் நரேந்திர மோடி 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டிய கோயிலில் கருவறைக்குள் செல்ல முடியவில்லை. ஆனால் தமிழகம் அப்படி இல்லை. இங்கு யார் வேண்டுமானாலும் கோயிலுக்கு போகலாம், கருவறைக்குள் சென்று சாமியை தொட்டு கும்பிடலாம். அதனால் மோடி அவர்களே தமிழ்நாடு வாங்க. சோழிங்கநல்லூர் தொகுதியில் மண்ணை பொன்னாக்கி வைத்துள்ளார் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த ரமேஷ்" என்று பேசினார்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வந்த பெண்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், திமுக சார்பில் தோசைக் கல் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

