ஜல்லிக்கட்டில் பங்கேற்க அதிகரித்த ஆர்வம்: 15,000 காளைகள், 5,000 மாடுபிடி வீரர்கள் ஆன்லைனில் பதிவு
ஜல்லிக்கட்டில் பங்கேற்க கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் 2,415 காளைகள் கூடுதலாக பதிவாகியுள்ளது.

Published : January 9, 2026 at 1:51 PM IST
மதுரை: மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்பதற்காக 15,047 காளைகளும், 5,234 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலமாக பதிவு செய்துள்ளனர்.
தைப் பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு வரும் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் முறையே அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகளும், மாடுபிடி வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக 15,047 காளைகளும், 5,234 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலமாக பதிவு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்வதற்கு இணையதளம் வழியாக கடந்த 7 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 8 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
15,047 காளைகள் பதிவு
இதில், இந்த ஆண்டு அவனியாபுரத்தில் 3,090 காளைகள், பாலமேட்டில் 5,747 காளைகள், அலங்காநல்லூரில் 6,210 காளைகள் என மொத்தம் 15,047 காளைகள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அவனியாபுரத்தில் 2,026 காளைகள், பாலமேட்டில் 4,820 காளைகள், அலங்காநல்லூரில் 5,786 காளைகள் என மொத்தம் 12,632 காளைகள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் 2,415 காளைகள் கூடுதலாக பதிவாகியுள்ளன.
| ஊர் பெயர் | 2025-ல் காளைகள் பதிவு | 2026-ல் காளைகள் பதிவு |
| அவனியாபுரம் | 2,026 | 3,090 |
| பாலமேடு | 4,820 | 5,747 |
| அலங்காநல்லூர் | 5,786 | 6,210 |
| மொத்தம் | 12, 632 | 15,047 |
மாடுபிடி வீரர்கள் பதிவு
அதே போல் நடப்பு ஆண்டில் அவனியாபுரத்தில் 1,849 பேர், பாலமேட்டில் 1,913 பேர், அலங்காநல்லூரில் 1,472 பேர் என மொத்தம் 5,234 மாடுபிடி வீரர்கள் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டில் அவனியாபுரத்தில் 1,735 மாடுபிடி வீரர்கள், பாலமேட்டில் 1,914 பேர், அலங்காநல்லூரில் 850 பேர் என மொத்தம் 4,499 மாடுபிடி வீரர்கள் இணையதளத்தில் பதிவு செய்திருந்தனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் 735 மாடுபிடி வீரர்கள் கூடுதலாக பதிவு செய்துள்ளனர்.
| ஊர் பெயர் | 2025ல் மாடுபிடி வீரர்கள் | 2026-ல் மாடுபிடி வீரர்கள் பதிவு |
| அவனியாபுரம் | 1,849 | 1,735 |
| பாலமேடு | 1,913 | 1,914 |
| அலங்காநல்லூர் | 1,472 | 850 |
| மொத்தம் | 5,234 | 4,499 |
இணையதளம் வழியாக பதிவு செய்யப்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தகுதிகள் பரிசீலனை செய்ய வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் மருத்துவத் துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களின் பரிசீலனைக்குப் பின்பு தகுதி வாய்ந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான டோக்கன்களை வழங்கப்படும். இதனை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

