18 பேரை கடித்து குதறிய தெருநாய்; ஆக்ரோஷமாக கையில் கம்புடன் நாயை தேடி அலையும் மக்கள்
தெருநாய் கடித்து 15-க்கும் மேற்பட்டோர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Published : February 24, 2026 at 7:53 PM IST
திருநெல்வேலி: கரிசல்குளம் அருகே வெறிபிடித்த தெருநாய் 18 பேரை கடித்துக் குதறியதால், அதை விரட்டுவதற்காக கையில் கல், கம்புடன் ஊர் மக்கள் உலா வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் தெருநாய் கடியால் பாதிக்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தெருநாய்களை மீட்டு, அவற்றுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுவதை அரசு தீவிரமாக்கியுள்ளது. இருந்தாலும், நாய் சம்பவங்கள் குறைந்த பாடில்லை. இதுபோன்ற சூழலில், நெல்லையின் ஒரே பகுதியில் தெரு நாய் ஒன்று 18 பேரை கடித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திருப்பணி கரிசல்குளம் நெல்லை மாநகராட்சியை ஒட்டி உள்ள பகுதியாகும். இங்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில், அப்பகுதியில் தெருநாய் ஒன்று சுற்றித் திரிந்துள்ளது.
இந்நிலையில், அந்த நாய்க்கு திடீரென வெறி பிடித்து, சாலையில் செல்லும் நபர்கள், வீட்டில் இருந்த பெண்கள், பள்ளிக்கு சென்ற சிறுவர் என கண்ணில் படும் நபர்களை எல்லாம் விரட்டி விரட்டி கடித்துள்ளது. அதில் பெண்கள், ஒரு சிறுவர் உட்பட 18-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நாய் கடித்து காயமடைந்த நபர்களை மீட்ட அப்பகுதி மக்கள், உடனடியாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அந்த வகையில், சித்ரா, ரோகிணி, சாமி, கிருஷ்ணன் மற்றும் 10 வயது சிறுவன் ஹரி உள்ளிட்ட 18 பேருக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், வெறி பிடித்த அந்த நாய் தொடர்ந்து ஒவ்வொருவராக கடித்த வருவதால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த சிலர், தெருநாயை விரட்டும் பணியில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், இளைஞர்கள் சிலர் ஆக்ரோஷமுடன் பெரிய பெரிய கம்புகள், கல் உள்ளிட்ட ஆயுதங்களோடு வீதி வீதியாக சென்று நாயை தேடும் பணியில் ஈடுபடுகின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

