காட்டுத் தீயை கட்டுப்படுத்த இந்தியாவிலேயே முதன்முறையாக நவீன கருவி: வனத்துறை அமைச்சர் தகவல்
விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க மின் வேலிகள் அமைக்கவும், விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க செயற்கைக்கோள் கேமிராக்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் ரஞ்சித் குமார் தெரிவித்தார்.

Published : July 6, 2026 at 8:34 PM IST
காஞ்சிபுரம்: வெயில் காரணமாக காட்டு தீ ஏற்பட்டால் அதனை தடுக்க முன்னெச்சரிக்கையாக ஒரு டன் எடையை தாங்கும் அளவிற்கு ட்ரோன் மூலம் நீர் தெளிப்பான் தயாராக உள்ளதாக வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய ரயில்வே நிலையத்தில் உள்ள ரயில்வே கேட் பகுதி பல ஆண்டுகளாக ஒருவழி பாதையாக இந்து வருகிறது. தற்போது மக்கள் தொகை பெருக்கம் காரணமாக ரயில்வே கேட்டில் ரயில் வரும் வேளையில் இருபுறமும் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனம் நீண்ட வரிசையில் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, இந்த இதனை இரு வழி சாலையாக மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரும், வனத்துறை அமைச்சருமான ரஞ்சித் குமார் இன்று அதிகாரிகளுடன் ரயில்வே கேட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி மீதான குதிரை பேர வழக்கு - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
உடனடியாக தெற்கு ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஒரு வழி சாலையை இருவழி சாலையாக மாற்றி போக்குவரத்து இடையூறு இல்லாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். உடனடியாக இந்த பணியை செய்ய நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த வனத்துறை அமைச்சர், "தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருகிறது. வெயில் காரணமாக காட்டுப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டால் அதனை தடுக்க முன்னெச்சரிக்கையாக ஒரு டன் எடையை தாங்கும் அளவிற்கு ட்ரான் இயந்திரம் மூலம் நீர் தெளிப்பான் தயாராக உள்ளது.
வனவிலங்கு மூலம் மனிதர்கள் தாக்குதலை தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு அம்சங்களை இங்கே அறிமுகப்படுத்த உள்ளோம். மேலும், விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க மின் வேலிகள் அமைக்கவும், விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க செயற்கைக்கோள் கேமிராக்கள் அமைக்கப்பட உள்ளன" என்றார்.

