ETV Bharat / state

‘SIR மூலம் இந்திய குடிமகன் தான் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம்’ - மு.க.ஸ்டாலின் வேதனை!

உண்மையான வாக்காளர்கள் யாரும் பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக தான், மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் திமுக சார்பில் போராடி வருகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : November 14, 2025 at 5:00 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: எஸ்ஐஆரால் தாங்கள் இந்தியாவின் குடிமகன்தான் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை பெரியமேட்டில் ரூ.3.86 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சார்-பதிவாளர் அலுவலகத்திற்கான புதிய கட்டடத்தையும், கொளத்தூர் பெரியார் நகரில் ரூ.5.24 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நகர் நூலகம் மற்றும் முதல்வர் படைப்பகத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (நவ.14) திறந்து வைத்தார்.

தொடர்ந்து, கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனை வளாகம், கார்த்திகேயன் சாலையில் ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக K5 - பெரவள்ளூர் புறக்காவல் நிலையம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி வைத்த முதலமைச்சர், கொளத்தூர் சிவ இளங்கோ சாலையில் ரூ.11.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் அலுவலகம் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், திமுக பாக முகவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, கொளத்தூரில் வெற்றி என்பது நிர்ணயிக்கப்பட்டது தான். அதில் சந்தேகம் இல்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், “எங்கே போனாலும் SIR குறித்து தான் பேசுகிறார்கள். மக்கள் அனைவரும் தாங்கள் இந்தியாவின் குடிமகன்தான் என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதை உருவாக்கியது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக தான். தேர்தல் ஆணையத்தை கைக்குள் வைத்துக் கொண்டு, இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ராகுல் காந்தி வெளிப்படையாகவே வாக்கு திருட்டை பற்றி, பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 'பீகார் வேறு தமிழ்நாடு வேறு.. இங்கே பாஜகவின் பாட்சா பலிக்காது' - செல்வப்பெருந்தகை!

உண்மையான வாக்காளர்கள் யாரும் பட்டியலில் இருந்து விடுபட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான் மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் திமுக சார்பில் போராடி வருகிறோம். ஏற்கனவே அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி இது குறித்து ஆலோசித்துள்ளோம். அதில் எடுக்கப்பட்ட முடிவின் படி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அது மட்டுமின்றி, நவம்பர் 11 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.

வரும் சட்டமன்றத் தேர்தலில், வெற்றிக்காக மட்டுமல்ல மக்களின் வாக்குரிமையை காக்கும் கடமையும் நமக்கு உள்ளது. நமக்கு அதிக கால அவகாசம் இல்லை. ஒருமாத காலத்திற்குள் அனைவரின் வாக்காளர் பட்டியலும் கணக்கிடப்படவுள்ளது. ஆனால், எஸ்ஐஆர் பணிக்காக வழங்கும் படிவங்கள் பூர்த்தி செய்வதற்குள் தலையே சுற்றுகிறது” எனத் தெரிவித்தார்.