இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன? அமைச்சர் டிஆர்பி ராஜா விளக்கம்
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்தார்..

Published : February 23, 2026 at 10:56 PM IST
சென்னை: படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு அனைத்து முயற்சிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள் மூர்த்தி, கீதா ஜீவன், டி.ஆர்.பி ராஜா, ரகுபதி உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பிறகு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
தமிழ்நாட்டில் புதிதாக நிறுவப்படவுள்ள மற்றும் விரிவாக்கம் மேற்கொள்ளப்படவுள்ள 46 முதலீட்டுத் திட்டங்களுக்கு, ஊக்க சலுகைகள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டங்களுக்காக ரூ.31,592.39 கோடி முதலீடு மேற்கொள்ள உறுதி அளிக்கப்பட்டுள்ளதுடன் 61,521 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருப்பூர், சேலம், கோயம்புத்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளது.
இந்த முதலீடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை Sakthi Aircraft Industry நிறுவனத்தின் பயிற்சி விமான உபபாகங்கள் இணைத்தல் மற்றும் பராமரிப்பு, NMB Minebea எனும் நிறுவனத்தின் பல்வகை செயல்பாடுகளுக்கான செமிகண்டக்டர் உற்பத்தி, Yield Engineering Systems இந்த நிறுவனத்தின் செமிகண்டக்டர் உற்பத்திக்கான சாதனங்கள் தயாரிப்பு, Dixon குழுமத்தின் மின்னணுவியல் சாதனங்கள் உற்பத்தி, SFO Technologies நிறுவனத்தின் மின்னணு உபபாகங்கள் உற்பத்தி, Vikram Solar நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின்கலன் சேமிப்பு அமைப்பு தொகுத்தல், Minerva (Battery Energy Storage System) Minerva Special Purpose Vehicle நிறுவனத்தின் கவச வாகனங்கள் உற்பத்தி ஆகும்.
மேலும் Hikoki Power Tools மிகப்பெரிய நிறுவனத்தின் மின்னாற்றல் கருவிகள் உற்பத்தி, Festo நிறுவனத்தின் தொழில்துறை தானியக்க சாதனங்கள் உற்பத்தி, மிக முக்கியமான Akers குழுமத்தின் விமான இயந்திரம் மற்றும் Gear Box உபபாகங்களுக்கான உற்பத்தி. Snider Electric குழுமத்தின் குளிரூட்டப்பட்ட சாதனங்கள் உள்ளிட்ட உற்பத்தி, Bharat Biotech நிறுவனத்தின் உயிர் அறிவியல் தயாரிப்பதற்கான பூங்கா மிகப்பெரிய பிரம்மாண்டமான அறிவிப்பு ஆகும்.
| இதையும் படிங்க: ''பரிசு, பணப்பட்டுவாடா'' - மதுரையில் 5 தொகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்; ஆட்சியர் பிரவீன் குமார் |
அதேப்போல் Caterpillar குழுமத்தின் கட்டுமான இயந்திரங்கள் சாதனங்கள் உற்பத்தி, Boeing நிறுவனத்தின் மேம்பட்ட வான்வெளி ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் மற்றும் Saint Gobain நிறுவனத்தின் கண்ணாடி தயாரிப்புகள் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்த முதலீடுகளுக்கு இன்றைய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் ஆட்சியில், தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி உறுதி செய்யப்பட்டு அங்கிருக்கின்ற மக்களுக்கும், ஆங்காங்கே நமது படித்த இளைஞர்களுக்கு அங்கேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகளை இந்த அமைச்சரவையின் மூலம் முதலமைச்சர் உருவாக்கித் தந்துள்ளார்'' என்றார்.

