ETV Bharat / state

'எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு பெண்களிடம் செல்வாக்கு பெற்றவர் ஸ்டாலின்' - அமைச்சர் சிவசங்கர் புகழாரம்

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேர்தல் என தேர்தல் இல்லாமல் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற லட்சியத்துடன் பாஜக செயல்படுவதாக அமைச்சர் சிவசங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உரையாற்றிய அமைச்சர் எஸ்‌.எஸ்.சிவசங்கர்
உரையாற்றிய அமைச்சர் எஸ்‌.எஸ்.சிவசங்கர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 4, 2026 at 10:56 PM IST

2 Min Read
Choose ETV Bharat

அரியலூர்: எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழக பெண்களிடம் செல்வாக்குமிக்க தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்வதாக அமைச்சர் எஸ்‌.எஸ்.சிவசங்கர் பேசியுள்ளார்.

அரியலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளரும், போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் இன்று அரியலூரில் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு பேசியதாவது:

இந்தியாவிலேயே பெண்களுக்கான மகத்தான திட்டங்களை தருவதில் சிறந்த முதலமைச்சராக நம்முடைய முதலமைச்சர் தான் இருக்கிறார். அதனால் தான் கடந்த காலங்களில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு இருந்ததை போன்று பெண்களின் செல்வாக்கு இன்று நம்முடைய தலைவருக்கு இருக்கிறது. யார் முதலமைச்சர் வேட்பாளராக வர வேண்டும் என பத்திரிகைகள் சர்வே எடுக்கும் போது, நம்முடைய தலைவருக்கு தான் ஆதரவு இருப்பது இன்று பத்திரிகைகள் வாயிலாக தொடர்ந்து செய்தியாக வந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் ஓய்வில்லாமல் உழைக்கின்ற முதலமைச்சராக நம்முடைய முதலமைச்சர் இருக்கின்றார். கிரிக்கெட்டில் சொல்வது போன்று அவர் அடிக்கும் ஒவ்வொரு பந்தும் சிக்ஸராக உள்ளது. ஆசிரியர்கள், ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து திமுகவுக்கு பெரிய எதிர்ப்பு என எதிர்க்கட்சிகள் எல்லாம் உட்கார்ந்திருந்த நேரத்தில் ஓய்வூதிய திட்டம் அறிவிப்பின் மூலம் அந்த பிரச்சனையையே முடித்து வைத்துள்ளார்.

பொங்கல் பரிசு பணம் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தற்போது பொங்கல் பரிசு அறிவிப்பின் மூலம் அந்த கோரிக்கையையும் தீர்த்து வைத்துள்ளார். நாளை கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். இப்படி ஒவ்வொரு திட்டத்தையும் மிகச் சிறப்பாக அறிவித்து, மிக நெருக்கடியான நிதி நிதிக்கடி சூழலிலும் இதையெல்லாம் செய்கிறார் என்றால் தமிழ்நாட்டை உயர்த்த வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான்.

நடக்கப் போகும் தேர்தல் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் ஆனதல்ல. அதிமுகவை ஏய்க்கும் பாஜகவிற்கும், நமக்குமான தேர்தல். பீகாரில் எஸ்ஐஆர் மூலம் எதிர்க்கட்சிகளின் வாக்குகளை நீக்கி ஆட்சியை பிடித்தனர். தமிழ்நாட்டில் எதுவும் செய்ய முடியாமல் திருப்பரங்குன்றத்தில் சர்வே கல்லில் தீபம் ஏற்ற துடித்தனர். எதையாவது சொல்லி பரபரப்பாக்கலாம் என்ற நோக்கத்தில் பாஜக உள்ளது.

இன்று அமித்ஷா பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி தான் தமிழ்நாட்டில் அமையப் போகிறது என புதுக்கோட்டையில் பேசியுள்ளார். அதிமுக தனித்து ஆட்சி என்று அறிவித்தாலும், அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று அறிவிக்கிறார். அவர்களது திட்டமே அதிமுகவை அகற்றிவிட்டு அந்த இடத்தில் வந்து எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் கைப்பற்றுவது தான்.

ஆனால் அதற்கு இங்கே இடம் கிடையாது. திமுக தான் வெல்லும் என்ற போர் குணத்தோடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். பிஜேபியை ஏன் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கேள்வி வரும். பாஜகவை உள்ளே விட்டால் என்ன நடக்கும் என்பதை சுற்றியுள்ள மாநிலங்களில் பார்த்து வருகிறோம். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேர்தல் என தேர்தல் இல்லாமல் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற லட்சியத்துடன் பாஜக செயல்படுகிறது.

அரியலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
அரியலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் (ETV Bharat Tamil Nadu)

இந்தியாவிலேயே அவர்களை எதிர்த்து குரல் கொடுக்கின்ற இயக்கமாக திமுக உள்ளது. ஒரே தலைவராக நம்முடைய முதலமைச்சர் தான் உள்ளார். ஒட்டுமொத்த இந்தியாவில் நம்பிக்கைக்கு உரிய தலைவராக நம்முடைய முதலமைச்சர் உள்ளார். காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரிடம் பேட்டி கேட்கும் பொழுது அவர் தாய் மொழியான காஷ்மீரில் பேட்டி தருகிறார். அதற்கு அவரை உருது மொழியில் பேட்டி தருமாறு சொல்கின்றனர். என்னிடம் கேட்டது போல தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் நீங்கள் கேட்க முடியுமா? அவர் தாய் மொழியான தமிழில் தான் பேட்டியளிக்கிறார்.

இதையும் படிங்க: அரசியலுக்காகவே தன்னை பெரியாரோடு சீமான் ஒப்பிடுகிறார் - திருமாவளவன்

அதே போன்று நானும் எனது தாய்மொழியான காஷ்மீரி மொழியில் தான் பேட்டி அளிப்பேன் என பேட்டியளித்தார். இன்று நம்முடைய முதலமைச்சர் தான் அனைவருக்கும் ரோல் மாடலாக உள்ளார். அப்படியான முதலமைச்சர் இங்கே வெற்றி பெற்றால் தான் மோடி மஸ்தான் நயவஞ்சகம் வீழ்த்தப்படும். எனவே முதலமைச்சர் ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்த உழைப்போம்" என தெரிவித்தார்.