வால்பாறை அருகே சிறுத்தை உயிரிழப்பு
சிறுத்தைக்கு ஏற்பட்ட காயங்களால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

Published : May 28, 2026 at 11:02 PM IST
கோயம்புத்தூர்: வால்பாறை அருகே ஒன்றரை வயதுடைய பெண் சிறுத்தை இறந்த நிலையில் கண்டுக்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டம், மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட மானாம்பள்ளி பிரிவு, மானாம்பள்ளி சுற்று, மீன்பாறை சரகம் பகுதியில் சுமார் ஒன்றரை வயதுடைய பெண் சிறுத்தை இறந்துக் கிடந்தது. இதனை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த களப்பணியாளர்கள் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து களப்பணியாளர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, இன்று (மே 28) காலை 11.20 மணியளவில் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் மற்றும் துணை இயக்குநர், பொள்ளாச்சி அதிகாரிகளளின் உத்தரவுப்படி உதவி வனப்பாதுகாவலர், வனப்பாதுகாப்புப்படை, பொள்ளாச்சி மற்றும் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் ஆகியோர் தலைமையில் வினோத், உலகளாவிய இயற்கைக்கான நிதியம் சீனிவாசன் தன்னார்வலர் ஆகியோர் முன்னிலையில் மரு.மெய்யரசன், உதவி வனக்கால்நடை மருத்துவ அலுவலர், பொள்ளாச்சி மற்றும் மருத்துவர் தர்மராஜ், கால்நடை உதவி மருத்துவர் ஆகியோரால் இறந்த சிறுத்தையின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது.
உடற்கூறாய்வில் சிறுத்தை தனது இரையை வேட்டையாட முயற்சித்தபோது ஏற்பட்ட காயங்களால் உடல்நலம் குன்றி இறந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் உடற்கூறாய்வின் போது சிறுத்தையின் உடற்பாகங்களை சேகரம் செய்து ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. வனத்துறை மற்றும் மருதுதவக் குழு முன்னிலையில் சிறுத்தையின் உடல் சம்பவ இடத்திலேயே முழுவதுமாக எரியூட்டப்பட்டது.

