’ஜனநாயகன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகாதது வருத்தம் தான் - குஷ்பூ
மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்றால் முதலில் பராசக்தி படத்தை தான் தடை செய்திருக்க வேண்டும் என குஷ்பு தெரிவித்துள்ளார்.

Published : January 11, 2026 at 3:21 PM IST
சென்னை: ஒரு ரசிகராக விஜய்யின் ’ஜனநாயகன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகாதது வருத்தம் அளிப்பதாக பாஜக நிர்வாகி குஷ்பு தெரிவித்துள்ளார்.
பாஜக மகளிர் அணி நிர்வாகி குஷ்பூ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”பராசக்தி படம் வெளிவந்ததற்கும், ஜனநாயகம் படம் வெளிவராததற்கும் மத்திய அரசை எப்படி குற்றம் சாட்ட முடியும். மத்திய அரசு ஒரு படத்தை தடுக்க வேண்டுமென்றால் ரெட் ஜெயன்ட் வெளியிடும் படத்தை தான் தடுக்க வேண்டும். ஏனென்றால் திமுகவை தான் எதிரியாக பார்க்கிறோம்.
இதைப் பற்றி தவறாக விமர்சனம் செய்யும் நபர்கள் கொஞ்சம் கூட யோசித்து பேச மாட்டார்களா, ஒரு குழந்தை அழுதால், அது பசியால் அழுகிறதா? என்று பார்ப்பதில்லை. மத்திய அரசுதான் அனைத்திற்கும் காரணம் என கூறுபவர்களை நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. மத்திய சென்சார் போர்டு விதிமுறைகள் படி அனைத்து சான்றிதழ்களும் கிடைக்கப்பெற்ற பிறகு தான் படத்தின் வெளியீடு தேதிகளை அறிவிக்க வேண்டும். ஆனால் எந்த தயாரிப்பாளரும் இந்த விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. படத்தில் நடிக்கும் நடிகர்கள் மீது தவறு சொல்லவில்லை தயாரிப்பாளர்கள் தான் தவறு செய்கிறார்கள்.
நானும் எனது மகளும் மிகப்பெரிய விஜய் ரசிகர்கள், அதன் அடிப்படையில் அவர் படம் வெளிவராவது மிகவும் வருத்தம் தான். மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்றால் முதலில் பராசக்தியை தான் தடை செய்திருக்க வேண்டும், திசை திருப்புவதற்கு திமுக மத்திய அரசை குற்றம்சாட்டுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை ஏமாற்ற வாய்க்கு வந்ததெல்லாம் சொல்கிறார்” என்றார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், “திமுக மக்களை எந்த அளவிற்கு ஏமாற்றுவார்கள் என அனைவருக்கும் தெரியும். கடந்த ஐந்து வருடங்களாக மக்களை ஏமாற்றும் வேலையை மட்டும் திமுக செய்து வருகிறது. இதற்கு முன்பு பொங்கல் பண்டிகைக்கு திமுக அரசு பணம் கொடுக்கவில்லை, இந்த ஆண்டு தேர்தல் வருகிறது என்பதால் மூன்றாயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர். ஊழல் கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கிறது. திமுகவும், காங்கிரசும் சொல்வதை மக்கள் காதில் வாங்கக் கூடாது. அவர்கள் ஏமாற்று வேலையை மட்டும் செய்கிறார்கள்.
கரூர் விவகாரத்தில் விஜய் தான் சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்டார். தற்போது சிபிஐ விசாரணை செய்கிறது. அதை அவர்கள் பார்க்கதான் வேண்டும். இந்த விபத்துக்கு காரணம் முழுக்க முழுக்க திமுக தான் என விஜய் கூறினார் தற்போது ஜனநாயகன் வெளியாகவில்லை என திமுக விஜய்க்கு ஆதரவு கொடுக்கிறது.
தேர்தல் வருவதால் தான் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், ரேஷன் அட்டைகளுக்கு 3000 ரூபாய், மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் ஆகிய அனைத்தையும் திமுக கொடுக்கிறது. பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை குறித்து தற்போது என்னால் பேச முடியாது” என கூறினார்.

