கரூர் பயணத்தில் விஜய் செய்யப் போகும் சம்பவம் - தடை கோரி நாதக நீதிமன்றத்தில் முறையீடு
தமிழக முதலமைச்சர் விஜய் நாளை முறுநாள் ஜூலை 10-ம் தேதி கரூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Published : July 8, 2026 at 5:13 PM IST
மதுரை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட உள்ளதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் தீரன் திருமுருகன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளரும், வழக்கறிஞருமான தீரன் திருமுருகன், அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்ய, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று முறையிட்டார்.
அப்போது அவர்,"கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வரும்போது, இந்த சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தோர் ருடும்பத்திற்கு அரசு வேலை வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கை இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று அவர் முறையிட்டார்.
தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நாளை மறுநாள் (ஜூலை 10) கரூர் செல்ல உள்ளார். அப்போது கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன என்று நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வில் தீரன் திருமுருகன் முறையிட்டார்.
இதையும் படிங்க: துணைவேந்தர் நியமனத்திற்கு விரைவில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்படும்: அமைச்சர் விஸ்வநாதன்
அவரது இந்த முறையீட்டை ஏற்றுகொண்ட நீதிபதிகள், இதனை மனுவாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூர் வேலுசாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மாநிில அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இந்தச் சம்பவம் குறித்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், முதல்முறையாக நாளை மறுநாள் (ஜூலை 10) கரூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை தருவகற்கான ஆணை வழங்க உள்ளதாக தகவல்கள் சில தினங்களுக்கு முன் வெளியாகின. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று இவ்வாறு முறையிடப்பட்டுள்ளது.

