ETV Bharat / state

ஈரான் போரை நிறுத்துங்கள் - சென்னையில் அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி அமெரிக்கா தாக்குதலில் கொல்லப்பட்டதன் எதிரொலியாக சென்னை அமெரிக்க துணை தூதரகத்திற்கு கூடுதல் காவல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

காமேனி கொலையை கண்டித்து சென்னையில் நடைபெற்ற பேரணி
காமேனி கொலையை கண்டித்து சென்னையில் நடைபெற்ற பேரணி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 1, 2026 at 5:53 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா உடனடியாக நிறுத்தக்கோரி சென்னையிலுள்ள அமெரிக்க துணை தூதரகத்தை பேரணியாக சென்று முற்றுகையிட முயன்ற இஸ்லாமியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரான் உச்ச தலைவர் காமேனி கொலைக்கு எதிராகவும், அங்கு போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு ஷியா முஸ்லீம் ஜமாத் அமைப்பினர் சென்னையிலுள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையிலுள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலிருந்து ராயப்பேட்டை புதுக் கல்லூரி வரையில் அவர்கள் பேரணியாக சென்றனர்.

இதன் காரணமாக, சென்னை கத்தீட்ரல் சாலையிலுள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் வழக்கமாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவலர்களைவிட கூடுதலாக காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அமெரிக்கா துணை தூதரகத்தை சுற்றியுள்ள சாலைகளிலும் ஒரு இணை ஆணையர், 2 துணை ஆணையர்கள், 4 உதவி ஆணையர்கள், 9 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பேரணியில் விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ், மனிய நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேரணியின்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “வளைகுடா நாடுகளில் தமிழர்கள் அதிகளவில் வேலைசெய்து வருகின்றனர். இந்த விஷயத்தில் இந்தியா அமைதி காப்பது நல்லதல்ல. போரை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அமெரிக்கா - இஸ்ரேல் இரண்டும் இணைந்து உலகப்போருக்கு வழி வகுக்கிறது” என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேரணி கூட்டத்தில் பேசிய அவர், “சிபிஐ, சிபிஎம், விசிக இணைந்து அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்து சென்னையிலும் தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் மார்ச் 3ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் யுத்த வெறி பிடித்த மனநோயாளி. மன நோயாளியின் கையில் உலக நாடுகள் சிக்கியுள்ளது தான் வேதனையளிக்கிறது. டிரம்ப்பின் வெறியால் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'ஒற்றை மனிதன்... 4 தசாப்தங்கள்' அமெரிக்காவை அலற விட்ட பேரரசன்; யார் இந்த காமேனி?

எண்ணெய் வியாபாரத்திற்கு முட்டுக்கட்டையாக உள்ள தலைவர்களை குறி வைக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளின் ஜனநாயக சக்திகள் இந்த நேரத்தில் ஓரணியில் திரள வேண்டும். அமெரிக்காவுக்கு உற்ற துணையான நாடாக இந்தியா மாறியிருப்பது வெட்கக்கேடானது, தலைகுனிவானது. இந்தியாவின் பாரம்பரிய மதிப்பை பிரதமர் மோடி சீர்குலைத்து விட்டார்.

இவ்வளவு சம்பவம் நடந்தும் இந்தியா மௌனம் காப்பது வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. ஈரான் தலைவர் படுகொலையை, யுத்தத்தை எதிர்த்து இந்திய அரசு கண்டன அறிக்கை வெளியிட வேண்டும். நாடாளுமன்றத்திலும் இதுகுறித்து குரல் எழுப்புவோம்” என்று உணர்ச்சிபொங்க பேசினார்.

பேரணிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, “அமெரிக்கா இஸ்ரேலுடன் கூட்டு சேர்ந்து ஈரான் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. போர் என்றால் ராணுவங்கள் தான் மோதும். ஆனால் திட்டமிட்டே ஈரான் தலைவரின் வீட்டை குறிவைத்து குடும்பத்தையே படுகொலை செய்திருக்கின்றனர். இதனை எதிர்த்து இந்திய பிரதமர் கண்டன அறிக்கை வெளியிட வேண்டும்

இந்தியாவின் மிகச்சிறந்த நண்பராக இருந்த காமேனி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதற்காக, அரசின் சார்பில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்க அறிவிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

சென்னை கத்தீட்ரல் சாலையிலுள்ள அமெரிக்க துணை தூரதகத்தை முற்றுகையிட முயன்ற இஸ்லாமியர்களை காவலர்கள் கைதுசெய்து அருகேயுள்ள சமூக நலக்கூடங்களில் அடைத்து வைத்துள்ளனர். இதனால் ராயபேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து பீட்டர்ஸ் சாலை முழுவதும் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.