ETV Bharat / state

ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் திடீர் சோதனை: கணக்கில் வராத ரூ.25,000 பறிமுதல்

பணம் மற்றும் நகைகள் இருந்ததையடுத்து, அவற்றை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநர் சரண்யா தேவியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் திடீர் சோதனை
ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் திடீர் சோதனை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 3, 2026 at 1:21 PM IST

1 Min Read
Choose ETV Bharat

ராணிப்பேட்டை: ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில், கணக்கில் வராத ரூ.25,850 மற்றும் 3 கிராம் தங்க நாணயங்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 2-வது தளத்தில் செயல்பட்டு வரும் ஊரக வளர்ச்சித் துறையின் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். 2026 புத்தாண்டை முன்னிட்டு பலரிடமிருந்து பரிசுப் பொருட்கள் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவலின் அடிப்படையில், ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார், ஆய்வுக் குழுவினரின் உதவியுடன் இரவு 8 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் உள்ள பல்வேறு அறைகளில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது, கணக்கில் வராத ரூ.25,850, 3 கிராம் தங்க நாணயங்கள், 50 டைரிகள், 15 சட்டைகள் மற்றும் பேண்ட் துணிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க: மன உளைச்சலில் பினாயிலை குடித்த பெண்: ஆயுதப்படை காவலர் மீது புகார்

அலுவலக அறையில் பணம் மற்றும் நகைகள் இருந்ததையடுத்து, அவற்றை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கணக்கில் வராத பணம் மற்றும் தங்க நாணயங்கள் குறித்து ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநர் சரண்யா தேவியிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறுகையில், “ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநர் அலுவலகத்தில், கணக்கில் வராத பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில், ரூ.25,850 ரொக்கம், 3 கிராம் தங்க நாணயங்கள், டைரிகள் மற்றும் உடைத் துணிகள் கைப்பற்றப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகளுக்கு உரிய கணக்கு ஆவணங்கள் இல்லாததால், சம்பந்தப்பட்ட அலுவலரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடிவின் அடிப்படையில் சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தனர். இந்த சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.