ETV Bharat / state

சென்னையில் ஐஏஎஸ் பயிற்சி மாணவியிடம் செயின் பறிப்பு - சண்டையிட்டு நகையை மீட்ட துணிச்சல்

நகை பறிப்பு சம்பவத்தைதொடர்ந்து போக்குவரத்து அதிகமுள்ள பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருட்டு சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் விசாரணை
திருட்டு சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் விசாரணை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 7, 2026 at 7:55 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: பரபரப்பாக இயங்கிவரும் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் ஐஏஎஸ் பயிற்சி மாணவியிடம் பட்டப்பகலில் மர்ம நபர் ஒருவர் செயினை பறித்த சம்பவம் அந்த பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும், அந்த மாணவி துணிச்சலாக சண்டையிட்டு தனது நகைகளை மீட்டுள்ளார்.

சென்னை தாம்பரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சிவில் சர்வீஸ் பயிற்சி நிறுவனத்தில் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த 22 வயது மாணவி ஒருவர் பயிற்சி பெற்று வருகிறார். இவர் நேற்று (ஜன 6) மதியம் வகுப்பு முடிந்து பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றுள்ளார். இந்து மிஷன் மருத்துவமனை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, லுங்கி மற்றும் சட்டை அணிந்துகொண்டு சாதாரணமாக வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென பாய்ந்து வந்து, மாணவி அணிந்திருந்த 7 பவுன் தாலி மற்றும் தங்கச் செயின்களை பறித்துள்ளார்.

ஐஏஎஸ் பயிற்சி மாணவி
ஐஏஎஸ் பயிற்சி மாணவி (ETV Bharat Tamil Nadu)

உடனே சுதாரித்துக் கொண்ட அந்த மாணவி, துணிச்சலுடன் அந்த நபரை பிடித்து அடித்து உதைக்க தொடங்கினார். மாணவி எதிர்த்து சண்டையிடுவதை கண்டு பயந்து போன திருடன், ஒருவழியாக மாணவியின் பிடியில் இருந்து நழுவி ஓடினார். அப்போது மாணவி பலமாக கூச்சலிடவே, அதனை கேட்ட பொதுமக்கள் ஓடிவந்து திருடனை பிடிக்க முற்பட்டனர். ஆனால், அதற்குள் அந்த நபர் ரயில் தண்டவாளத்தை சுற்றி அமைந்துள்ள புதர்கள் வழியாக தப்பியோடிவிட்டதாக சொல்லப்படுகிறது. போகும்போது மாணவியிடமிருந்து பறித்த செயின்களை சாலையோரம் வீசிவிட்டுச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: நகைக்காக மூதாட்டி படுகொலை; மாட்டுக் கொட்டகையில் நடந்த பயங்கரம்

இதையடுத்து,அந்த நகைகளை மீட்ட பொதுமக்கள், அவற்றை மாணவியிடம் ஒப்படைத்தனர். அதன் மதிப்பு ரூ. 9 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. திருடனை பிடிக்க போராடியதில் மாணவிக்கு கழுத்து மற்றும் கைகளில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் அப்பகுதி மக்கள் அனுமதித்தனர்.

இச்சம்பவம் குறித்து தாம்பரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு நடந்த சம்பவம் பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே முக்கிய சாலைகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.