மனைவியின் உடலை எரித்து சாம்பலை கிணற்றில் கரைத்த கணவன் - மதுரை அருகே கொடூர சம்பவம்
இந்த கொலை வழக்கு தொடர்பாக பிரபாகரனின் நண்பர்கள் கரண், சாந்தகுமார் ஆகியோரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published : July 6, 2026 at 9:46 PM IST
மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே மனைவியைக் கொன்று உடலை எரித்த கணவர், சாம்பலை கிணற்றில் கரைத்தாக கூறி கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கொட்டக்குடியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (30). இவர் கார்த்திகா (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
| இதையும் படிங்க.. தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகள் மீதும் காட்டத் தவறுவது ஏன்?- அமைச்சர் ராஜ்மோகனுக்கு சீமான் சரமாரி கேள்வி |
பிரபாகரன் மீது ஏற்கனவே கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கணவன்- மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கார்த்திகா தனது தாயார் வீட்டுக்கு வந்து தங்கி இருந்ததாகவும், சில நாட்களுக்கு முன்பு பிரபாகரன் கார்த்திகாவை சமாதானம் செய்து தனது வீட்டுக்கு அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று, கார்த்திகாவை தாம் கொலை செய்துவிட்டதாக கூறி பிரபாகரன் சரணடைந்தார். கடந்த 3-ஆம் தேதி இரவு, தங்கள் சொந்த வயலுக்கு அழைத்துச் சென்று கார்த்திகாவை கொலை செய்து, உடலை எரித்து விட்டு சாம்பலை அருகில் இருந்த கிணற்றில் கரைத்துவிட்டதாகவும் கிராம நிர்வாக அலுவலர் செல்லத்திடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கிராம நிர்வாகஅலுவலர் அளித்த தகவலின் பேரில், மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தி பிரபாகரனை கைது செய்தனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டு, தடயங்களை சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்த அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.
முதற்கட்ட விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம், குழந்தையைச் சுற்றிய குடும்பப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. எனினும், கொலைக்கான உண்மையான காரணம் என்னவென்று பிரபாகரனிடம் தொடர்ந்து நடத்தப்படும் விசாரணைக்குப் பிறகே உறுதியாக தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
| இதையும் படிங்க.. இதுவரை இல்லாத அளவில் பொங்கலுக்கு தரமான வேட்டி, சேலை வழங்கப்படும் - அமைச்சர் விஜய் பாலாஜி உறுதி |
மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக பிரபாகரனின் நண்பர்கள் கரண், சாந்தகுமார் ஆகியோரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவனே மனைவியை கொலை செய்து உடலை எரித்து, சாம்பலை கிணற்றில் கரைத்ததாக கூறியுள்ள சம்பவம் மேலூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

