அதிவேகம் பயணம் ஆபத்தில் முடியும் - இளைஞர்களுக்கு சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் அறிவுரை
அதிவேக பயணத்தை இளைஞர்கள் மேற்கொள்வது அவர்களுடைய உயிருக்கும், பொதுமக்களுடைய பாதுகாப்புக்கும் இடையூறாக இருக்கும் என காவல் ஆணையர் அமல்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

Published : July 6, 2026 at 10:35 PM IST
சென்னை: அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவதால் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறைக்கு தனியார் நிறுவனம் சார்பில், 300 சாலை பாதுகாப்பு இரும்பு தடுப்புகள் (Road Safety Barricades) வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை உயர் அதிகாரிகள், தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் கூறுகையில், "சென்னை மாநகரில் போக்குவரத்தை நெறிப்படுத்துவதற்கும், பொதுமக்களுக்கு உதவுவதற்கும் ஹுண்டாய் நிறுவனம் சிஎஸ்ஆர் நிதியின் மூலம் இன்று 300 பேரிகேட்ஸ் ஸ்டீல் பேரிகேட்ஸ், ஸ்டென்லஸ் ஸ்டீல் பேரிகேட்ஸ் மற்றும் கொலாஸ்டரபல் பேரிகேட்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.
இது போக்குவதத்தை சீர் செய்வதற்கும், பல நேரங்களை பொதுமக்களுக்கு சாலையை கடப்பவதற்கு உதவியாக இருக்கும். ஹூண்டாய் நிறுவனம் பல வருடங்களாக காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்தை சீர் செய்வதற்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்கள். இதற்கு காவல்துறை சார்பாக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த வாரம் சிறுவயது இளைஞர்கள் இருவர் லைசன்ஸ் கூட இல்லாம வேகமாக ஓட்டிச் சென்று, அது சோசியல் மீடியாக்களில் வந்ததை நாம் பார்த்தோம். சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது மாதிரியான செயல்களை இளைஞர்கள் செய்வது அவருடைய உயிருக்கும், பொதுமக்களுடைய பாதுகாப்புக்கும் இடையூறாக இருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், அதிவேகமாக வாகனத்தை ஓட்டினால் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே இதே மாதிரியான நடவடிக்கைகள் இளைஞர்கள் ஈடுபட வேண்டாம் என்று காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

