கடுமையான, விரைவான தண்டனையே குற்றங்கள் குறைய வழிவகுக்கும் - சரத்குமார்
புதிய திரைப்படங்களுக்கு முதல் 7 நாட்களில் 5 காட்சிகள் அனுமதி அளித்து வரவேற்கத்தக்கது என சரத்குமார் கூறியுள்ளார்.

Published : May 26, 2026 at 5:03 PM IST
தூத்துக்குடி: பாலியல் குற்றங்களுக்கு கடுமையான மற்றும் விரைவான தண்டனை வழங்குவது குற்றங்கள் குறைய வழிவகுக்கும் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் சான்ஷான் கிரிக்கெட் அகாடமி சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டர்ப் கிரிக்கெட் மைதானத்தை நடிகர் சரத்குமார் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டது.
குறிப்பாக தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்றும் வரும் குற்ற செயல்கள் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “உடனடியாக நடக்கும் குற்றங்களை காவல்துறை கண்காணிக்க முடியாது. பெரிய அளவில் திட்டமிட்ட குற்றங்கள் நடைபெறபோகிறது என்றால்தான் உளவுத்துறை தகவல் கிடைக்கும். போதை அல்லது வேறு காரணங்களினால் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க சமூக அளவில் நடவடிக்கை தேவை.
இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதே குற்ற செயல்கள் குறைய வாய்ப்பாக அமையும். பாலியல் குற்றங்கள் சார்ந்த வழக்குகளில் சாட்சிகள் உறுதியாக உள்ள நிலையில், குற்றவாளிக்கு கடுமையான தண்டனையை விரைவாக வழங்க வேண்டும். அப்படி செய்யும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் அது உதவியாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை பாலியல் குற்ற வழக்குகளில் மரண தண்டனை வழங்க வேண்டும், அதுவும் மக்கள் மத்தியில் தூக்கிட்டால் சரியாக இருக்கும்” என கூறினார்.
மேலும், “பாலியல் வழக்குகளில் சிறார்களுக்கும் வயது வித்தியாசம் பார்க்காமல் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். விரைவான மற்றும் கடுமையான தண்டனை இருந்ததால் தான் குற்ற செயல்கள் குறையும்” என தெரிவித்தார்.
| இதையும் படிங்க: செல்போன் சிக்னல் மூலம் 16 சவரன் தங்க நகை ஒரு மணி நேரத்தில் மீட்பு - எட்டையாபுரம் போலீசாருக்கு குவியும் பாராட்டு |
புதிய திரைப்படங்களுக்கு முதல் 7 நாட்களில் 5 காட்சிகள் அனுமதி அளித்து குறித்து கேள்விக்கு, “அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தற்போது படம் நன்றாக இருந்ததால் தான் மக்கள் திரையரங்கிற்கு வந்து பார்க்கிறார்கள். அப்படி இருக்கும் போது, அதிகமான காட்சிகள் வைப்பதினால், அவர்களுக்கு ஏற்ற நேரங்களில் படத்தை வந்து பார்க்க முடியும். சென்னையில் ப்ளூ டைமண்ட் என்ற திரையரங்கில் 24 மணி நேரமும் படம் பார்க்கும் அம்சமெல்லாம் அப்போது இருந்தது. இந்த அறிவிப்பு திரையரங்கிற்கு வந்து படம் பார்த்தை ஊக்குவிக்கும் விதமாக உள்ளதாக நான் பார்க்கிறேன்” என பதிலளித்தார்.
அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு கருத்து இல்லை என கூறினார். தொடர்ந்து, சூர்யவம்சம் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும், பச்சைக்கிளி முத்துச்சரம் படம் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். ஏய், அரசு, அய்யா ஆகிய படங்களுக்கு கதையம்சம் அமைந்தால் இரண்டாவது பாகம் எடுக்கலாம் என கூறினார்.

