சுற்றுச்சூழலை பாதிக்காத புதிய கண்டுபிடிப்புகள் தேவை - மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி
சுற்றுச்சூழலை பாதுகாத்திட அதிக அளவிலான மரக்கன்றுகளை நட வேண்டும் என அமைச்சர் சுரேஷ் கோபி வலியுறுத்தினார்.

Published : July 7, 2026 at 5:06 PM IST
கோவை: தற்போதைய சூழலில் சுற்றுச்சூழலை பாதிக்காத புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்று மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் சார்பில் கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அரங்கில், தூய்மை விழிப்புணர்வை வலியுறுத்தும் நிகழ்ச்சியான 'ஸ்வட்சா பக்வாடா' நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபி கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், தூய்மை பாரதம் உறுதிமொழியை மத்திய இணை அமைச்சர் முன்னிலையில் மாணவர்கள் எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, கல்லூரி மைதானத்தில் தாயின் பெயரில் ஒரு மரம் நடும் இயக்கத்தின் ஒரு பகுதியாக, தனது தாயின் பெயரில் மரக்கன்றை மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி நட்டு வைத்தார். மேலும், கல்லூரி பணியாளர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, "தற்போதைய சூழலில் பல்வேறு மாசுபாடுகள் காரணமாக அதிகளவு கார்பன் எரிவாயு வெளியேற்றப்படுவதால் சுற்றுச்சூழல் வேகமாக பாதிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாத்திட மரக்கன்றுகளை அதிகம் நட வேண்டும். அதேபோன்று சுற்றுச்சூழலை பாதிக்காத புதிய கண்டுபிடிப்புகளின் தேவை தற்போது அதிகரித்துள்ளது" என்றார்.
மேலும் பேசிய அவர், "இந்த தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் செயல்பாடுகள் என்பது என்பது நம்முடைய வருங்கால தலைமுறையிருக்கானது. மாணவர்கள் தூய்மை நடவடிக்கைகளை இன்று ஒரு நாள் மட்டும் மேற்கொள்ளாமல், ஆண்டு முழுவதும் கடைபிடிக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

