காரை முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பொறுமையை இழந்த திமுக எம்.பி: நடந்தது என்ன?
குச்சனூரில் மின் மயானம் கேட்டும், வேண்டாம் எனவும் இரு தரப்பினர் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வனின் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

Published : January 3, 2026 at 9:52 PM IST
தேனி: தனது காரை முற்றுகையிட்டு போராடிய பொதுமக்களிடம், பொறுமையை இழந்த திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற குச்சனூர் சனீஸ்வர பகவானின் திருக்கோயிலில் பக்தர்களுக்காக அமரும் இடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் வருகை தந்தார். ஆனால், எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் வந்த காரை வழியிலேயே மறித்த பொதுமக்கள், ‘தங்கள் கிராமத்திற்கு மின் மயானம் வேண்டாம்’ என கூறி மனு அளிக்க வந்தனர்.
அவர்களிடம் எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் பேச்சுவார்த்தை செய்து கொண்டிருக்கும் பொழுது, எதிர்த்தரப்பில் ‘எங்கள் ஊருக்கு மின் மயானம் வேண்டும்’ என ஒரு தரப்பினர் கோஷமிட்டு வந்தனர். அதனால், இரு தரப்புக்கு இடையே பேச்சு வார்த்தை செய்யும் போது வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால், கோபமடைந்த எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் அந்த இடத்திலிருந்து தனது காரில் ஏறிய கிளம்பிய போது, போராட்டக்காரர்கள் காரை மீண்டும் வழி மறித்தனர்.
அப்போது, வழிமறித்த நபர்களுடன் தங்க தமிழ்ச்செல்வன் காரில் இருந்தவாறு வாக்குவாதம் செய்தார். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றிய நிலையில், பொறுமையை இழந்த தங்க தமிழ்ச்செல்வன், காரில் இருந்து கீழே இறங்கி வாக்குவாதம் செய்தவரை தாக்க கையை ஓங்கி, தாக்க முற்பட்டார்.
மேலும், சத்தமாக கத்தியபடி வாக்குவாதம் செய்தார். நிலைமை கைமீறி போனதால், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மற்றும் கட்சி தொண்டர்கள் எம்.பி தங்க தமிழ்ச்செல்வனை சமாதானம் செய்து அவசரமாக காரில் அனுப்பி வைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பிரச்சனைகளுக்கு நடுவே, அடிக்கல் நாட்ட வந்த பணியைச் செய்யாமலே தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

