தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்; அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் விருப்ப மனு
திமுக சார்பில் 9,850-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அதில் 6,000-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப வந்துள்ளன

Published : March 2, 2026 at 4:00 PM IST
சென்னை: சட்டப் பேரவை தேர்தலையொட்டி அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.
தமிழ்நாட்டில் வெகு விரைவில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கன விருப்ப மனு விநியோகம் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகின்றன. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர்.
திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மட்டுமல்லாது, முதலமைச்சர், துணை முதலமைச்சர் பெயர்களிலும் கட்சியின் முக்கிய தலைவர்கள் என ஏராளமானோர் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர்.
விருப்பமனு பெறுவதற்கான அவகாசம் நீட்டிப்பு
ஏற்கெனவே திமுக தலைமை சார்பில் விருப்ப மனுக்களை பெறுவதற்கான கடைசி நாள் இன்று (மார்ச் 2) என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றதால், விருப்ப மனுக்களை பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது. இதனால் நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று வரும் 6 ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை பெறுவதற்கான கால நீட்டிப்பை அறிவித்துள்ளது திமுக தலைமை.
இன்றைய தினம் திமுகவில் முக்கிய புள்ளிகள் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கினர். அந்த வகையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அனிதா ராதாகிருஷ்ணன், சக்கரபாணி, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு ஆகியோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.
இன்று பிற்பகல் 1.30 நிலவரப்படி திமுக சார்பில் 9,850-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அதில் 6,000-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப வந்துள்ளன.
விருப்ப மனுக்களை பெறுவதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கூட்டம் கூட்டமாக வந்து விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். திமுக நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களுடன் ஆரவாரத்துடன் மேளதாளம் முழங்க சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர்.

