வார விடுமுறையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்; கண்காணிப்பு பணிகள் தீவிரம்
கூட்ட நெரிசலை பயன்படுத்தி எந்த ஒரு குற்றச்செயலும் நடைபெறாமல் இருக்க நான்கு ரத வீதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Published : May 31, 2026 at 6:32 PM IST
ராமநாதபுரம்: வார விடுமுறை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் இன்று குவிந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு கடலில் புனித நீராடினர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலுக்கு நாள்தோறும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
| இதையும் படிங்க.. அபிஷேக் பானர்ஜியை தொடர்ந்து கல்யாண் பானர்ஜி மீதும் கொடூர தாக்குதல்; கடும் பதற்றத்தில் மேற்கு வங்கம் |
இந்த நிலையில் தொடர் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினத்தை ஒட்டி, வெளியூர்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், இன்று அதிகாலை முதலே அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு வாழ்ந்து மறைந்த தங்களின் முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி கொடுத்தனர். பின்னர், பக்தர்கள் கோயிலுக்கு உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி எந்த ஒரு குற்றச்செயலும் நடைபெறாமல் இருக்க நான்கு ரத வீதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அக்னி தீர்த்த கடற்கரையில் சடலம் மீட்பு
இதற்கிடையே, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் அடையாளம் தெரியாத நபர் சடலமாக மீட்கப்பட்டார்.
ராமேஸ்வரத்திற்கு இன்று வருகை தந்திருந்த பக்தர்கள், ராமநாதசுவாமி கோவிலுக்கு எதிரே உள்ள அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி விட்டு தங்களின் முன்னோருக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி கொடுத்தனர். இந்நிலையில், அக்னி தீர்த்த கடலில் அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்து சடலமாக கிடந்தார்.
அவருடைய சடலத்தை மீட்டு எடுத்துச் செல்ல மாநகராட்சி ஊழியர்கள் வராமல் அலட்சியம் காட்டினர். உயிரிழந்த நபரின் சடலம், நீண்ட நேரம் எடுத்துச் செல்லப்படாமல் இருந்ததால் பக்தர்கள் அச்சம் அடைந்தனர். மேலும் புனித நீராட வந்த பக்தர்களுக்கு இந்த சம்பவம் அசௌகரித்தையும் முகசுளிப்பையும் ஏற்படுத்தியது.
சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.

