அதிநவீன விரைவு பேருந்து சேவை - உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவங்கிவைப்பு
கடந்த டிசம்பர் மாதம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ரூ.34.30 கோடி மதிப்பிலான 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகளின் இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

Published : January 6, 2026 at 7:02 PM IST
சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ரூ.37.98 கோடி மதிப்பிலான 61 அதிநவீன புதிய பேருந்துகளின் இயக்கத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதோடு, பொதுமக்கள் பொது போக்குவரத்தினை அதிகம் பயன்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அதிநவீன சொகுசு பேருந்துகள், மின்சார பேருந்துகள், குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சார பேருந்துகள் என தொடர்ந்து போக்குவரத்து சேவை மேம்பாட்டு பணிகளுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
அதனடிப்படையில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கு அதிநவீன சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் பொதுமக்களுக்கும், பணிகளுக்காக பல்வேறு நகரங்களுக்கு செல்லும் இளைஞர்களுக்கும் பாதுகாப்பான பயணத்திற்கான முதன்மைத் தேர்வாக விளங்கி வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 24.12.2025 அன்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ரூ.34.30 கோடி மதிப்பிலான பல அச்சுகள் (MULTI-AXLE) கொண்ட 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 110 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த புதிய பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் எளிதாக பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை தீவுத்திடலில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 37.98 கோடி ரூபாய் மதிப்பிலான இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய 61 அதிநவீன புதிய பேருந்துகளின் இயக்கத்தை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
| இதையும் படிங்க: “சென்னை மக்களே.. புதிதாக பிறக்கவுள்ள ஆமைக் குஞ்சுகளை வரவேற்போம்” - சுப்ரியா சாகு அழைப்பு |
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக், உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

