தமிழ்நாட்டில் ‘பேனா’ என்றால் அது ‘கலைஞர்’ தான் - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
நான் முதல்வன் திட்டம் எந்த அளவிற்கு வெற்றி அடைந்து உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு நீங்கள் தான் என்று உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.

Published : January 7, 2026 at 7:54 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் பேனா என்று சொன்னால், மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி தான் நினைவுக்கு வருவார் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்கள் மத்தியில் பெருமிதத்துடன் பேசினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் தமிழ்நாடு திறன் போட்டி 2025-ல் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார்.
தொடர் உழைப்பு, முயற்சி, ஒழுக்கம் ஆகிய மூன்றும் இருந்தால் மாணவர்கள் எந்த திறனையும் வளர்த்துக் கொள்ள முடியும் என விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
நான் முதல்வன் திட்டம் எந்த அளவிற்கு வெற்றி அடைந்து உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு நீங்கள் தான் என்று கூறிய அவர், இதன் மூலம் 1,200 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

பள்ளி படிப்பும், கல்லூரி செல்வதே பிற மாநிலங்களில் கனவாக இருக்க கூடிய நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த கட்ட வளர்ச்சிகளை தமிழக மாணவர்கள் அடைந்து வருகிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார்.
தமிழ்நாட்டில் ‘பேனா’ என்று சொன்னால் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி தான் நினைவுக்கு வருவார் என்று குறிப்பிட்ட உதயநிதி, அவரது தொடர்ந்த எழுத்துப் பணிகள் குறித்தும், தனது கடைசி காலம் வரை சமூக ஊடகங்களின் மூலமாக பல்வேறு கருத்துகளை எழுதி வந்ததையும் விவரித்து கூறினார்.
மேலும், நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி, SSC / RRB வங்கி பணித்தேர்வு வெற்றியாளர்களுக்கு துணை முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
குறிப்பாக, ஆசிய உலக திறன்கள் 2025 போட்டிகளில் பதக்கம் வென்ற முகமது மபாஸ் மற்றும் சுரேந்தர் ஆகிய இரு மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.
முன்னதாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பாக தொடங்கப்பட்ட கண்காட்சியை துணை முதலமைச்சர் பார்வையிட்டார். தொடர்ந்து அவர் முன்னிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம், எல்&டி, சோஹோ, நேச்சுரல்ஸ், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை உள்ளிட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, அது தொடர்பான ஆவணங்கள் கையெழுத்தானது.
| இதையும் படிங்க: தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி? |
நிகழ்ச்சியில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

