சென்னையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
முதற்கட்ட விசாரணையில், தீக்காயம் அடைந்தவர்கள் அனைவரும் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

Published : March 4, 2026 at 5:45 PM IST
சென்னை: நகைப்பட்டறையில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
சவுகார்பேட்டை சிங்கண்ணன் தெருவில் அமைந்துள்ள கட்டடத்தில் 4வது மாடியில் செயல்பட்டு வந்த நகை பட்டறை ஒன்றில் கடந்த மாதம் 25ஆம் தேதி ஊழியர்கள் நகைகளை உருக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் வியாசர்பாடியைச் சேர்ந்த நகைப்பட்டறை உரிமையாளர் சுமன் பால் உட்பட 7 பேர் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்த தீ விபத்து குறித்து அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தீக்காயம் அடைந்தவர்கள் அனைவரும் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில் தீ விபத்தில் காயம் அடைந்த நகை பட்டறையின் உரிமையாளர் சுமன் பால் கடந்த 26ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து கடந்த மார்ச் 2ஆம் தேதி பட்டறை ஊழியர் சிமந் தோமல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் நேற்று ராகேஷ் என்பவரும், இன்று பட்டறை ஊழியர்களான சூரஜ் தோலே, அரபிந்த் லங்கல் ஆகிய இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. மேலும் 2 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

