கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்
தனது வாழ்நாள் முழுவதும் அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும் ஆயிரக்கணக்கான போராட்டங்களை நடத்திய பெருந்தலைவர் நல்லகண்ணு.

Published : February 25, 2026 at 2:19 PM IST
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது.
இன்று (பிப்.25) பிற்பகல் 1.55 மணியளவில் அவர் காலமானார் என்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நல்லகண்ணு மரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், 'உடல்நலக் குறைவு காரணமாக, 01.02.2026 அன்று நல்லக்கண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24 தினங்களாக சிகிச்சையின்போது அவரது உடல்நிலையில் ஏற்றதாழ்வுகள் இருந்து வந்தன. பல்துறை மருத்துவக்குழு தீவிர சிகிச்சையும், அதிதீவிர கண்காணிப்பையும் தொடந்து வந்தனர். இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து, அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், நல்லக்கண்ணு (25. 02.2026) இன்று பிற்பகல் 1.55 மணியளவில் நம்மை விட்டு பிரிந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

| இதையும் படிங்க: உதயசூரியனை தாண்டி பருந்தோ, கழுகோ பறந்ததாக வரலாறு கிடையாது - விஜயை மறைமுகமாக சாடிய தமிழச்சி தங்கபாண்டியன் |
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. மேலும், அவரது சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவக்குழுக்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மறைந்த நல்லகண்ணு'வின் பூத உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுவதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

