ETV Bharat / state

இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தி இருக்கிறேன்: முதலமைச்சர் ஸ்டாலின்

நம் தமிழினத்தின் லட்சிய பயணத்தில், நம் கால்கள் பாதை மாறக்கூடாது, நம் தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் (@mkstalin X page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 1, 2026 at 10:03 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டியிருக்கிறேன் என மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று அவரது 73 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், திரை பிரபலங்கள், கட்சி தொண்டர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தனது பிறந்தநாளை, குடும்பத்தினருடன் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடிய ஸ்டாலின் பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து, கோபாலபுரத்திற்கு சென்று அவரது தாயார் தயாளு அம்மாளிடமும், சிஐடி நகரில் ராஜாத்தி அம்மாளிடமும் வாழ்த்து பெறவுள்ளார்.

இந்த நிலையில், தனது பிறந்தநாளையொட்டி மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தள பக்கத்தில், “தமிழும், தமிழ்நாடும் நம் உயிர். அவற்றை காப்பது நம் கடமை. உழைப்பைத் தவிர வேறொன்று அறியேன் எனச் சொல்லி, இளமை முதல் 73-ஆம் வயது காணும் இந்நாள் வரையில், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பணியாற்றுவதே என் வாழ்நாள் கடமை என செயலாற்றி வருகிறேன்.

தமிழும், தமிழ்நாடும் தலைநிமிர்ந்த வரலாற்றில் நான் சிறுதொண்டனாய் இருந்தாலும், கிடைக்கின்ற வாய்ப்புகளில் எல்லாம் பெருந்தொண்டாற்றிடவே நினைக்கிறேன். அந்த உறுதியோடுதான், திராவிட மாடலில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி, முன்னேற்றப் பாதையில் நடைபோட்டு கொண்டிருக்கிறோம்.

உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டியிருக்கிறேன். கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இல்லத்திலும் போய் சேர்ந்துள்ளது திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களும், சாதனைகளும்.

இதையும் படிங்க: போர் பதற்றம்: தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு

தனிக்குணம் கொண்ட தமிழர் தலைநிமிர்ந்து வாழ்கின்றனர். நாட்டிற்கே புத்தொளியை வழங்குகின்றனர் என்று புகழும் வகையில் தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது. நம் தமிழினத்தின் லட்சிய பயணத்தில், நம் கால்கள் பாதை மாறக்கூடாது, நம் தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது. சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் - நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும். இதற்காக என்னை இன்னும் முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன். இதுவே என் பிறந்தநாள் உறுதிமொழி.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நமக்குக் காட்டிய பாதையில், தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற போர்க்குணத்தோடு பயணித்து ஒன்றாக வெல்வோம்” என பதிவிட்டுள்ளார்.