டாஸ்மாக் கடைகளை மூடுங்கள் - மதுரையில் மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
2010-இல் தமிழகம் முழுவதும் மது போதைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தி, அதனை தமிழ்நாடு அரசின் முதன்மை செயலரிடம் வழங்கினோம் என்று மகளிர் ஆயத்தை சேர்ந்த மேரி தெரிவித்தார்.

Published : July 4, 2026 at 6:32 PM IST
மதுரை: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூடி முழுமையான போதை ஒழிப்பு கொள்கையை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வலியுறுத்தி 'மகளிர் ஆயம்' என்ற அமைப்பின் சார்பில் மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரையில் மகளிர் ஆயம் என்ற பெண்கள் அமைப்பும், தமிழ் தேசிய பேரியக்கம் என்ற அமைப்பும் சேர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தினார்கள். மதுரை பெத்தானியாபுரம் அண்ணா முதன்மை சாலை சந்திப்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூடி முழுமையான போதை ஒழிப்புக் கொள்கையை புதிய தவெக அரசு அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த மகளிர் ஆயத்தை சேர்ந்த மேரி கூறுகையில், "மதுப் பழக்கம் என்பது வீட்டுக்கு மட்டுமின்றி நாட்டுக்கும் கேடு. மதுவால் அரசுக்கு கிடைக்கும் வருமானம் என்பது அவமானத்திற்குரியது.
மகளிர் ஆயம், கடந்த பல ஆண்டுகளாகவே மதுப்பழக்கத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் மது போதைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தி, அதனை தமிழ்நாடு அரசின் முதன்மை செயலரிடம் வழங்கினோம். 15 ஆண்டுகள் ஆன பிறகும் இது தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
தஞ்சாவூரில் டாஸ்மாக் கடையை இழுத்து மூடும் போராட்டத்தையும் மகளிர் ஆயம் நடத்தியது. மதுக்கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி தனது வாழ்நாளெல்லாம் போராடிய சசி பெருமாள் 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31-ஆம் தேதி தன் இன்னுயிரை நீத்தார். அவருக்கு இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார்.
இந்த ஆர்ப்பபாட்டத்தில் முழுமையான மதுவிலக்கை கொண்டு வர வலியுறுத்தியும், டாஸ்மாக் மதுபான கடைகளை கொஞ்சம் கொஞ்சமாக மூட வேண்டியும் மகளிர் ஆயம் அமைப்பு சேர்ந்த பெண்கள் கோரிக்கை முழக்கம் எழுப்பினர். பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

