தொழில்நுட்பம் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்: UmagineTN-2026 உச்சி மாநாட்டில் முதல்வர் பேச்சு
தமிழ்நாட்டில் இருக்கும் 38 மாவட்டங்களில், 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி நடைபெறுகிறது என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Published : January 8, 2026 at 2:19 PM IST
சென்னை: அறிவானாலும், தொழில்நுட்பமானாலும் அது எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற UmagineTN-2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை இன்று தொடங்கி வைத்தார்.
தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்நாடு
இவ்விழாவில் பேசிய அவர், "தமிழ்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிப் பயணத்தில், ஒரு முக்கியமான தருணமாக இந்த இரண்டு நாள் மாநாடு அமையும் என்று நான் நம்புகிறேன். இன்றும், நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில் எந்தெந்த தலைப்பில் செஷன் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று பார்த்தேன். கடைக்கோடி பகுதியையும் டிஜிட்டல் ஹெல்த்-கேர் மூலமாக சென்றடைவது, கேமிங் துறையில் தமிழ்நாட்டை முக்கிய மையமாக முன்னேற்றுவது, வாட்சாப் கவர்னென்ஸ் என தற்காலத்திற்கு தேவையான பல தலைப்புகள் இடம்பெற்றுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியில், தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கெல்லாம் ஒரு படி முன்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதை நிறைவேற்றுவது போல, இந்த மாநாடு அமைந்திருக்கிறது. தொழில்நுட்பத் துறையில், இன்றைக்கு நாம் இந்த அளவிற்கு எல்லோருக்கும் அட்வான்சாக இருக்கிறோம் என்றால், அதற்கான அடித்தளத்தை அமைத்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர். தொழில்நுட்பம் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திற்கு மட்டுமான கருவி இல்லை. அது சாமானியர்களை Empower செய்யும் கருவி என்ற பார்வையுடன் தமிழ்நாட்டின் I.T. பாலிசியை கலைஞர் கொண்டுவந்தார்.

பள்ளிகளிலேயே கணினிக் கல்வி - டைடல் பூங்கா என்று அவர் கொடுத்த தொடக்கத்தில்தான் நாம் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். தொழில்நுட்பம் ஒரு துணைச் செயல்பாடாக இல்லாமல் பொருளாதார சக்கரத்தின் மைய அச்சாக இன்றைய நிலையில் மாறியிருக்கிறது. நாம் பாரம்பரியமாக வலுவாக இருக்கும் சர்வீஸ் செக்டாரிலிருந்து, உயர்நுட்பம், புத்தாக்கம் மற்றும் புதுமை மையமான பொருளாதாரத்திற்கு தமிழ்நாடு நகர்ந்து வருகிறது.
இப்படி, உற்பத்தித் திறனையும், டிஜிட்டல் புதுமையையும் ஒருங்கிணைக்கும் தொழிற்சூழல் இயல்பாகவே அமைந்திருப்பதுதான் தமிழ்நாட்டின் தனிச்சிறப்பாக அமைந்திருக்கிறது. ஆனால், இது தானாகவே நிகழ்ந்துவிடவில்லை, திராவிட மாடல் ஆட்சியின் வழிநடத்திய காரணத்தினால் தான் இது உருவாகியிருக்கிறது," என்று ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.
திராவிட மாடல் பாலிசி
மேலும் பேசிய அவர், "டெக்னாலஜியை வெறும் பொருளாதார வளர்ச்சிக் கருவியாக பார்க்காமல், சமூக முன்னேற்றத்திற்கான சாதனமாக பார்ப்பதுதான் திராவிட மாடல் பாலிசி. நான் முதல்வன் போன்ற திறன் மேம்பாட்டு முயற்சிகள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், உலகளாவிய தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு முகமைகள்வரை எல்லாம் ஒரே பாதையில், ஒரே இலக்குடன் சேர்ந்து செயல்படும் தமிழ்நாட்டின் நிர்வாக கட்டமைப்பும், தொழில்நுட்பக் கண்ணோட்டமும்தான் நம்முடைய வளர்ச்சிக்கான காரணம்.
Deep tech திறன் மேம்பாட்டு திட்டங்கள், டேட்டா சென்டர் பாலிசி, ஆராய்ச்சிக் கட்டமைப்பில் தொடர்ச்சியான முதலீடுகள் இவை எல்லாம் சேர்ந்து 'I.T. சேவை மையம்’ என்ற அடையாளத்தில் இருந்து, முழுமையான தொழில்நுட்ப மற்றும் புதுமை சக்தியாக தமிழ்நாட்டை மாற்றும் தெளிவான பாதையை வெளிப்படுத்துகிறது. இந்த மாற்றம் ஒரு நகரத்தில் மட்டுமே சுருங்கிவிடாமல், மாநிலம் முழுவதும் சமமாக பரவுவதையும் உறுதி செய்திருக்கிறோம்.
ஸ்டார்ட்-அப் தமிழ்நாடு மற்றும் நியோ டைடல் பார்க் போன்ற முயற்சிகள் மூலம் புதுயுக பொருளாதார வளர்ச்சி, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி போன்ற நகரங்களும், தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்குதாரர்களாக உயர்ந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் 38 மாவட்டங்களில், 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி நடைபெறுகிறது என்று ஒன்றிய அரசின் STPI வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. திராவிட மாடல் என்றால் என்ன? என்று கேட்பவர்களுக்கு ஒன்றிய அரசு சொல்லும் இந்த தரவுதான் பதில்.
தமிழ்நாட்டின் புத்தாக்க சூழலும், இந்தியாவிலேயே சிறந்த ஒன்றாக இருக்கிறது. பெரும் I.T. மற்றும் பொறியியல் மனித வளம், உலகத் தர கல்வி நிறுவனங்கள், பல சிறப்பு மையங்கள், ஆராய்ச்சியில் இருந்து அறிவுசார் சொத்துகள் உருவாக்கம், உலகச் சந்தை அடைவு வரை முழுமையான பயணத்தை சாத்தியமாக்கி இருக்கிறது. இந்தியாவில் பதிவாகும் நான்கில் ஒரு காப்புரிமை அதாவது பேட்டண்ட் விண்ணப்பம் தமிழ்நாட்டில் இருந்து பதிவாகும் வகையில் நாம் முன்னணியில் இருக்கிறோம். இது எல்லாவற்றிற்கும் எது மையக் காரணம் என்றால், நம்முடைய ஆற்றல்மிக்க மனிதவளம் தான்" என்றார்.
உலகம் உங்கள் கையில்
"A.I. சந்தாவுடன் கல்லூரி மாணவர்களுக்கு லேட்டஸ்ட் மாடல் லேப்டாப்களை 'உலகம் உங்கள் கையில்' என்று அந்தத் திட்டத்தின் மூலமாக வழங்கியிருக்கிறோம். இதை செலவு என்றோ, இலவசம் என்றோ நாங்கள் கருதவில்லை. தொழில்நுட்பம் எல்லோருக்கும் சமமாக கிடைப்பதற்கு, எதிர்காலத்தை நோக்கிய முதலீடாகத்தான் இதை பார்க்கிறோம். அந்த வகையில் நம்முடைய கனவுகளுக்கு சிறகுகளை வழங்குவது போல, தொழில்நுட்பம், தரவுப் பொருளாதாரம், டிஜிட்டல் நிர்வாகம், புத்தொழில் நிறுவனங்கள், உலகளாவிய திறன் மையங்கள் ஆகிய அனைத்தையும் ஒரே மேடையில் இந்த UMAGINE TN மாநாடு ஒருங்கிணைத்திருக்கிறது.
தமிழ்நாட்டின் இலக்குகள் தெளிவானது. புதுயுகத்தின் டெக்னாலஜியில் தமிழ்நாடுதான் டாப்-இல் இருக்க வேண்டும். ஆனால், அந்த வளர்ச்சியில் யாரும் விட்டுப்போக கூடாது; அறிவானாலும், தொழில்நுட்பமானாலும் அது எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும். அப்படியொரு வருங்காலத்தை தான் நம்முடைய இளைய தலைமுறைக்காக திராவிட மாடல் அரசு கட்டி எழுப்பி வருகிறது. இன்றைய UMAGINE வருங்காலத்தை நோக்கிய நம் பயணத்திற்கான பிரகடனம் நம் நாளைய வெற்றிக்கான தொடக்கம்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

