ETV Bharat / state

பவாரியா கொள்ளையர்களால் அதிமுக எம்.எல்.ஏ. கொலை செய்யப்பட்ட வழக்கு - நவம்பர் 21-ந் தேதி தீர்ப்பு!

எம்எல்ஏ சுதர்சனத்தை கொன்ற பவாரியா கொள்ளையர்களை ஜாங்கிட் குழுவினர் பிடித்த சாகசக் கதை பின்னர் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படமாக வெளிவந்தது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : November 17, 2025 at 7:06 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.சுதர்சனம் பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு நவம்பர் 21 ஆம் தேதி வழங்கப்படும் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2005-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் அதிமுக சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கே.சுதர்சனம். இவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2005ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு, பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள கே.சுதர்சனம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த 5 பேர் கும்பல், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, அவரது மனைவி மற்றும் மகன்களை தாக்கி, 62 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது கட்சி எம்எல்ஏ கொல்லப்பட்டது குறித்து அறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கொள்ளையர்களைச் சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டார். குற்றவாளிகளைப் பிடிக்க ஐஜி ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மிகத் தீவிரமாகச் செயல்பட்ட தனிப்படைகள், அடுத்த ஒரு மாதத்திலேயே கொள்ளையர்கள் யார்? எனக் கண்டுபிடித்தது. அதில், முக்கியக் குற்றவாளியை பிப்ரவரி 1ஆம் தேதி கைது செய்தது.

அதனைத் தொடர்ந்து துப்பு துலக்கி அந்த வருடம் மார்ச் மாதத்தில் ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்களை கைது செய்தனர். மேலும் செப்டம்பரில் முக்கியக் குற்றவாளிகள் இருவர் வடமாநிலத்தில் என்கவுன்டர் செய்யப்பட்டனர். ராஜஸ்தானில் பவாரியா கொள்ளையர்களை ஜாங்கிட் குழுவினர் பிடித்த சாகசக் கதை பின்னர் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது.

அதிமுக எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் தனிப்படை போலீசார், 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற மூன்று பெண்கள் தலைமறைவாகி விட்டனர். கைது செய்யப்பட்ட ஓம்பிரகாஷ் பவாரியா உள்பட இருவர் சிறையிலேயே இறந்துவிட்டார்.

இதையும் படிங்க: 4 பேர் போராட்டத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதி - உயர் நீதிமன்றம் உத்தரவு!

மீதமுள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தார் சிங் ஆகிய நான்கு பேருக்கு எதிரான வழக்கை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் விசாரித்து வந்தார். வழக்கில், 86 பேர் காவல் துறை சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், ஜெகதீஷ் உள்பட நான்கு பேருக்கு எதிரான இந்த வழக்கில் நவம்பர் 21 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.