கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவ இடத்தில் மத்திய தடயவியல் அதிகாரிகள் திடீர் ஆய்வு
வருகிற ஜனவரி 12 ஆம் தேதி தவெக தலைவர் விஜய், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Published : January 9, 2026 at 3:50 PM IST
கரூர்: வேலுச்சாமிபுரத்தில் தவெக பரப்புரை கூட்டம் நடைபெற்ற இடத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தினர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிப்புரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான விசாரணை மேற்கொள்ள தமிழக அரசு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் ஆணையம் ஒன்றை அமைத்தது.
இச்சம்பவம் நடைபெற்ற சில மணிநேரத்திலேயே தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உட்பட பல அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்தனர். மேலும் அன்றிரவே தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் நகர பொருளாளர் பவுன்ராஜ் உள்ளிட்ட 4 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடைபெற்று வந்தது. இதனிடையே, கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கின்பேரில், உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
| இதையும் படிங்க: 'ஜனநாயகன்' படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள் |
இந்நிலையில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் கரூரில் முகாமிட்ட சிபிஐ குழுஅக்டோபர் 17ஆம் தேதி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளது.
இதில் முக்கிய திருப்பமாக தவெக மாநில பொதுச் செயலாளர் ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில் வருகிற ஜனவரி 12ஆம் தேதி, டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று (ஜன 9) காலை 11 மணிக்கு, கரூரில் தவெக கூட்டம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் (Department Of Central Forensic Science Sercice - DFSS) ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் தவெக தலைவர் விஜய்யின் வாகனம் நிறுத்தப்பட்ட இடம், கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடம் ஆகியவற்றை அளவீடு செய்து தடயங்களையும் சேகரித்தனர். மேலும் நவீன கருவி ஒன்றை வைத்து கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தை ஒளிப்பதிவும் செய்தனர்.
இந்த ஆய்வில், ஆறுக்கும் மேற்பட்ட மத்திய தடயவியல் அதிகாரிகளுடன், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவரும் உடனிருந்தார். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆய்வினால், வேலுச்சாமிபுரத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

