ETV Bharat / state

பயமோ, பாரபட்சமோ இல்லாமல் செயல்படுங்கள் - தமிழ்நாடு அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல்களின் போது பண பலத்தைப் பயன்படுத்துவதையும், இலவசப் பொருட்களை விநியோகிப்பதையும் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசியல் கட்சிகள் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளன.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 26, 2026 at 10:09 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களத்தில் பயம் அல்லது பாரபட்சம் இல்லாமல் செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலுக்கான தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படும் என்ற நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று அங்கீகரிப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தலை வழங்கிய இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர், பயம் அல்லது பாரபட்சம் இல்லாமல் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

கூட்டத்தில் பங்கேற்ற காவல்துறை உயர் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள்
கூட்டத்தில் பங்கேற்ற காவல்துறை உயர் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் (ETV Bharat Tamil Nadu)

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பு;

  • தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோருடன் இன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தயார்நிலை குறித்து விரிவான மதிப்பாய்வை மேற்கொண்டார்.
  • மதிப்பாய்வின் போது, ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய தேசிய காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி, அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆணையம் கலந்துரையாடி அவர்களின் ஆலோசனைகளைக் கோரியது.
  • தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்தியதற்காக பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்தைப் பாராட்டின.
  • தேர்தல்களின் போது பண பலத்தைப் பயன்படுத்துவதையும், இலவசப் பொருட்களை விநியோகிப்பதையும் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசியல் கட்சிகள் ஆணையத்தை வலியுறுத்தின. சில அரசியல் கட்சிகள் தேர்தல்களின் போது முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டன.
  • தேர்தல் தேதிகளை இறுதி செய்யும் போது வரவிருக்கும் பண்டிகைகளை மனதில் கொள்ளுமாறு சில அரசியல் கட்சிகள் ஆணையத்தை வலியுறுத்தின.
  • அரசியல் கட்சிகளின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல்கள் எப்போதும் சட்டத்தின்படி சுதந்திரமாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்படும் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உறுதியளித்தார்.
  • அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலை தொடர்ந்து, தேர்தல் திட்டமிடல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண்மை, தளவாடங்கள், தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி, பறிமுதல், சட்டம் ஒழுங்கு, வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மை நடவடிக்கைகள் ஆகியவற்றின் ஒவ்வொரு அம்சத்திலும் அமலாக்க முகமைகளின் தலைமை / ஒருங்கிணைப்பு அதிகாரிகள், காவல் துறை தலைவர், காவல் துறை தலைமை இயக்குநர், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் ஆணையம் விரிவான மதிப்பாய்வை நடத்தியது.
  • அமலாக்க முகமைகளின் அனைத்துத் தலைமை / ஒருங்கிணைப்பு அதிகாரிகளும் முழுமையான பாரபட்சமற்ற தன்மையுடன் செயல்படவும், தூண்டுதல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் உறுதியாகக் கட்டுப்படுத்தவும் ஆணையம் உத்தரவிட்டது.
  • வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களின் வசதி மற்றும் அணுகலை முன்னுரிமைப்படுத்தவும், அதிகாரிகளுக்கு முழுமையான பயிற்சி அளிக்கவும், தேர்தல் செயல்முறைகள் குறித்து பரந்த விழிப்புணர்வை உறுதி செய்யவும் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், காவல் கண்காணிப்பாளர்களுக்கும் ஆணையம் உத்தரவிட்டது.
  • முழுமையான பாரபட்சமற்ற தன்மையை உறுதிசெய்து, பயம் அல்லது பாரபட்சம் இல்லாமல் செயல்படவும் ஆணையம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. மேலும் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக சட்டங்கள், விதிகள் மற்றும் தேர்தல் நடைமுறைகளில் இருந்து எந்தவொரு விலகலையும் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை ஆணையம் தெரிவித்தது.'' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.