சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்புடைய கஞ்சா சிக்கியது; கடத்தல் குருவியை பிடித்த அதிகாரிகள்
கைது செய்யப்பட்ட இளைஞர் கேரள மாநிலத்தை சேர்ந்த படித்த பட்டதாரி இளைஞர் என்பதும், சரியான வேலை வாய்ப்பு இல்லாததால் இதுபோன்று கடத்தல் கும்பலுக்கு குருவியாக செயல்பட்டு கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

Published : February 26, 2026 at 5:17 PM IST
சென்னை: ரூ.6 கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் எனப்படும் உயர் ரக கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெருமளவில் போதைப் பொருள் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் அனைத்து பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த கேரளாவை சேர்ந்த 25 வயது மதிப்புடைய இளைஞர் ஒருவர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

மேலும் அவரது ஆவணங்களை பரிசோதனை செய்தபோது, சுற்றுலா விசாவில் அவர் தாய்லாந்து சென்று வந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரது பையில் ரகசிய அறையில் 15 பிளாஸ்டிக் பார்சல்களில் உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பயணி இடமிருந்து சுமார் 5.9 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு சுமார் 6 கோடி ரூபாய் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் பயணியை கைது செய்து விசாரணை நடத்திய போது, அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த படித்த பட்டதாரி இளைஞர் என்பதும், சரியான வேலை வாய்ப்பு இல்லாததால் இது போன்று கடத்தல் கும்பலுக்கு குருவியாக செயல்பட்டு கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், இவர் கடத்தி வந்த கஞ்சா பார்சல்களை சென்னை விமான நிலையத்திற்கு வெளியே காத்திருக்கும் ஒருவரிடம் கொடுக்க இருந்ததையும் தெரிவித்துள்ளார். இதனால் விமான நிலையத்திற்கு வெளியே சுங்கத்துறை அதிகாரிகள் ரகசியமாக யார் காத்திருக்கிறார்கள்? என கண்காணித்தனர். ஆனால் இந்த விவகாரம் அந்த நபருக்கு தெரிந்ததால் அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தொடர்ந்து அந்த பயணியிடம் கஞ்சா கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட கும்பல் எது? போதைப் பொருளை வாங்க இருந்த நபர் யார்? என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

