அண்ணா நகர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.கே. ராம்குமார் வெற்றி
இந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் சிற்றரசு களமிறங்குகிறார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும், தவெக சார்பில் வி.கே. ராம்குமாரும், நாதக சார்பில் எஸ். சங்கரும் இங்கு போட்டியிடுகின்றனர்.

Published : May 4, 2026 at 4:02 AM IST
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில், சென்னையின் முக்கிய தொகுதியான அண்ணாநகர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.கே. ராம்குமார் முன்னிலையில் இருக்கிறார்.
1977ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் அண்ணாநகர் தொகுதி. இத்தொகுதி உருவானதில் இருந்தே விஐபி தொகுதியாக திகழ்வதுதான் இதன் சிறப்பம்சாக இருக்கிறது. மறைந்த முதலமைச்சர் கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி இது.
நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஐடி ஊழியர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோர் நிரம்ப வசிக்கும் பகுதி என்பதால் மேல்தட்டு மக்களின் தொகுதியாக அண்ணாநகர் பார்க்கப்படுகிறது.
அண்ணா நகர் கிழக்கு, அண்ணாநகர் மேற்கு, சாந்தி காலனி, ஷெனாய் நகர், அமைந்தகரை, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ காலனி, சூளைமேடு ஆகிய பகுதிகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.
1977 முதல் 2021ஆம் ஆண்டு வரை இங்கு நடைபெற்ற தேர்தல்களில் திமுக 9 முறை வெற்றி பெற்று அண்ணாநகரை தனது கோட்டையாக வைத்துள்ளது. அதிமுக ஒரு முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் மட்டுமே இங்கு வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில், தற்போதைய 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் சிற்றரசு களமிறங்கியுள்ளார். இவர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் ஆவார்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும், தவெக சார்பில் வி.கே. ராம்குமாரும், நாதக சார்பில் எஸ். சங்கரும் இங்கு போட்டியிடுகின்றனர்.அண்ணாநகர் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள் 1,81,402 பேரில் 84.89 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலாகவே தவெக வேட்பாளர் வி.கே. ராம்குமார் முன்னிலையில் இருந்து வந்தார். இறுதி சுற்றின் முடிவில், அவர் 71,375 வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் 50,012 வாக்குகளை பெற்றிருந்தார். இதன் மூலம் 21,363 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.

