அம்மோனியா வாயு அகற்றும் பணி நாளையும் நடைபெறும் - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தகவல்
அம்மோனியா முழுமையாக அகற்றப்பட்டு ஆலைக்கு சீல் வைக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Published : July 7, 2026 at 8:18 PM IST
திருவள்ளூர்: கடல் உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இருந்து அம்மோனியாவை அகற்றும் பணிகள் நாளையும் (ஜூலை 08) நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இயங்கி வந்த கடல் உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிந்து 18 பேர் உயிரிழந்த நிலையில் ஆலையில் இருந்து அம்மோனியாவை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களில் மிக பாதுகாப்பாக 5 டன் அம்மோனியா வாயு ஆலையில் இருந்து டேங்கர் லாரிக்கு மாற்றப்பட்டது. பின்னர் டேங்கர் லாரி, சென்னை மணலியில் உள்ள எம்எஃப்எல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மூன்றாவது நாளாக நேற்றும் (ஜூலை 06) எஞ்சியுள்ள அம்மோனியா வாயுவை கந்தக அமிலம் கலந்து கம்ப்ரஸர் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்ற நிலையில், நான்காவது நாளாக இன்றும் இப்பணி தொடர்ந்தது. இதனிடையே மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், காவல்துறையினர், வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மின்வாரிய அலுவலர்கள் ஆகியோர் களப்பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள அம்மோனியா வாயு இன்று முழுவதுமாக அகற்றப்படும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
| இதையும் படிங்க: சதுப்புநிலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்: CREDAI துணை தலைவர் விஸ்வஜித் |
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "அம்மோனியா வாயு அகற்றும் பணிகள் இன்று முழுமையாக நிறைவடையாததால், இப்பணிகள் நாளையும் தொடரும். எனவே, ஆலைக்கு செல்லும் இந்த சாலை ஒருவழிப் பாதையாக மட்டுமே திறந்துவிடப்படும். எனினும் யாருக்கும் பாதிப்பு இருக்காது. தொழிற்சாலையில் இருந்து விரைவான முறையில் அம்மோனியா அகற்றப்பட்டு ஆலைக்கு சீல் வைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

