ETV Bharat / state

சிறுவர்கள் கத்தி வைத்துக்கொண்டு ரீல்ஸ் போடுவதை பார்க்க பயமாக உள்ளது - அமமுக நிர்வாகி சிஆர்.சரஸ்வதி வேதனை

பெண்கள், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு நீதிமன்றங்கள் ஜாமீன் மற்றும் குறைந்தபட்ச தண்டனை கொடுக்கக்கூடாது என அமமுக நிர்வாகியும், நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமமுக கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி
அமமுக கொள்கைப் பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 6, 2026 at 10:27 AM IST

1 Min Read
Choose ETV Bharat

தஞ்சாவூர்: சிறுவர்கள் கையில் கத்தி எடுத்துக்கொண்டு ரீல்ஸ் போடுவதை பார்க்கும்போது பயமாகவும், வருத்தமாகவும் உள்ளது. தமிழக முதலமைச்சர் போதை கலாச்சாரத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக கொள்கைப் பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கொள்கைப் பரப்பு செயலாளரும், நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சி.ஆர்.சரஸ்வதி, "2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முதல் முதலில் வேட்பாளரிடம் மனு வாங்கியது அமமுகதான். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி, மக்கள் ஆட்சி மலர வேண்டும் என்பது எங்கள் ஆசை. நிச்சயமாக அமமுக இடம்பெறும் கூட்டணிதான் ஆளும் கட்சியாக வரும். அந்த கூட்டணியில் அமமுக இடம் வகிக்கும். கூட்டணி குறித்து டிடிவி தினகரன் என்ன முடிவு எடுப்பார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது,” என்றார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற அமித் ஷாவின் விருப்பம் நிறைவேறாது - அப்பாவு உறுதி

மேலும் கூறிய அவர், "தமிழகத்தில் போதை கலாச்சாரம் மோசமாக உள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பள்ளிக்கூடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. சமீப காலன்களில் 14 - 15 வயதுடைய சிறுவர்கள் கையில் கத்தி எடுத்துக்கொண்டு ரீல்ஸ் போடுகிறார்கள். நான்கு சிறுவர்கள் வட மாநில இளைஞரை கத்தியால் தாக்கியுள்ளனர். இந்த தலைமுறையினர் போகும் போக்கை பார்க்கும்போது பயமாகவும், வருத்தமாகவும் உள்ளது. இந்த போதை கலாச்சாரத்தை கண்டிப்பாக ஒழிக்க வேண்டும்.

இதுபோன்று ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடந்ததில்லை. சட்டம் ஒழுங்கு முறையாக இருக்கும். தமிழக முதலமைச்சர் இந்த போதை கலாச்சாரத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றங்களும் அதேபோல், பெண்கள், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு நீதிமன்றங்கள் குறைந்த பட்ச தண்டனை, ஜாமீன் கொடுக்கக்கூடாது. அதிகபட்சனை தண்டனை கொடுக்க வேண்டும். அப்போதுதான் பயம் வந்து தவறுகள் படிப்படியாக குறையும். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பள்ளி, கல்லூரிகள் வாசலில் விற்பது கவலை ஏற்படுத்துகிறது." என்று சி.ஆர்.சரஸ்வதி கூறினார்.

முன்னதாக, கடந்த டிசம்பர் 27ஆம் தேதி திருத்தணி ரயில்வே குடியிருப்பு அருகே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பதிவேற்றம் செய்யும் நோக்கத்திற்காக 4 சிறார்கள் சேர்ந்து, ஒடிசாவைச் சேர்ந்த இளைஞரை கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலான நிலையில், இதில் சம்பந்தப்பட்ட 3 சிறார்களை திருத்தணி போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.