முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா - வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்கள்
அறிவாலயத்தை நோக்கி தொண்டர்கள் தங்களது வாகனங்களில் அணிவகுத்து வருவதன் காரணமாக தேனாம்பேட்டை, அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Published : March 1, 2026 at 4:53 PM IST
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் 73வது பிறந்தநாளான இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும், திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் காலையிலேயே அவர் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடியும் முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சரை சந்திக்க வருபவர்களுக்கு அறிவாலயத்தில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
தொண்டர்கள் அனைவரும் பிரதான நுழைவு வாயில் வழியாக அனுமதிக்கப்பட்டு, முதலமைச்சரை சந்தித்த பின், பக்க வழியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அறிவாலயத்தை நோக்கி தொண்டர்கள் தங்களது வாகனங்களில் அணிவகுத்து வருவதன் காரணமாக தேனாம்பேட்டை, அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், கூட்டணி கட்சித் தலைவர்கள் அறிவாயலத்தின் பிரதான வெளியேறும் வாயில் வழியாக வந்து சென்ற வண்ணம் உள்ளனர். திருமாவளவன், வைகோ, முத்தரசன், சண்முகம், வீரபாண்டியன், தனியரசு, வேல்முருகன் உள்ளிட்டவர்கள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நேரில் வந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். தொண்டர்கள் பலாப்பழம், வீரவாள், சிறுத்தை பொம்மை, யானை உருவம் அமைக்கப்பட்ட ஊஞ்சல் என விதவிதமான பரிசுகளுடனும், மேள தாளத்துடனும் வந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், “முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். வரக்கூடிய தேர்தலில் மதச்சார்பற்ற சக்திகள் வெற்றி நடைபெறும்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், “முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தோம். வளைகுடா முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பிரதமர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு நொடியும் பிரதமர் நீடிக்கக்கூடாது என்பதற்கு இதுவே சான்று” என தெரிவித்தார்.
விசிக தலைவர் திருமாவளவன், “விசிக சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தோம். இந்த தேர்தல் சராசரியான தேர்தல் இல்லை. திமுக - அதிமுக இடையே நடைபெறும் தேர்தல் இல்லை. சமூக நீதி அரசுக்கும், சனாதன அணிக்கும் இடையே நடக்கும் போர். இந்தத் தேர்தலில் தமிழ்நாடு வெல்லும்” என்றார்.
மனித நேய மக்கள் கட்சியின் பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறும்போது, “இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாட்டை தலைசிறந்த மாநிலமாக உருவாக்கியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் எல்லாம் வல்ல ஆசியுடன் நீண்ட ஆயுள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்” என தெரிவித்தார்.
அதேபோல் தமிழ்நாடு வணிகர் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், திராவிடர் வெற்றிக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி வேல்முருகன் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

