அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'திடீர்' டெல்லி பயணம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

Published : January 7, 2026 at 6:47 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ம.க இணைந்துள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு சென்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்களை சந்தித்து, தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், கூட்டணிக்குள் புதிதாக எந்த கட்சியை வரவழைக்க வேண்டும் என்று திட்டங்களை வகுக்கவும் டெல்லி சென்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே அ.தி.மு.க., பா.ஜ.க., ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துக் கொண்ட நிலையில், இன்று காலை அன்புமணி தலைமையிலான பாமகவும் அதிகாரப்பூர்வமாக இணைந்தது.
மேலும், கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பா.ஜ.க பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், முதல் கட்டமாக அ.தி.மு.க எத்தனை தொகுதியில் போட்டியிடும், பா.ஜ.க-வுக்கு எத்தனை தொகுதிகள் வழங்கப்படும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. அதனை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பல்வேறு கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளும் ஆலோசனைகளும் நடைபெற்று வருகிறது.
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தான் இன்று அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
இதனை தொடர்ந்து, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிய நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து விமான மூலம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு, பாஜக முக்கிய தகவல்களை சந்தித்து கூட்டணியை வலுப்படுத்துவது குறித்தும், மேலும் முக்கிய கட்சிகளை கூட்டணிக்குள் இணைப்பது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

