ஆசீர்வாதம் பண்ணுங்க டீச்சர்... தேர்வுக்கு முன் மாணவன் செய்த நெகிழ்ச்சி செயல்
இந்த முறை தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 3,412 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7,99,692 மாணவர்கள் மற்றும் 27,474 தனித் தேர்வர்கள் என மொத்தம் 8,27,475 பேர் எழுதுகின்றனர்.

Published : March 2, 2026 at 1:40 PM IST
திருப்பத்தூர்: வாணியம்பாடியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் அறிவுரை கூறிய போது, ஆசிரியை காலில் சற்றென்று விழுந்து மாணவன் தேர்வு எழுத ஆசீர்வாதம் செய்யுங்கள் என கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் இன்று முதல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கின. காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிவரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. இந்த முறை தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 3,412 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7,99,692 மாணவர்கள் மற்றும் 27,474 தனித் தேர்வர்கள் என மொத்தம் 8,27,475 பேர் எழுதுகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு தொடங்கியது. மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என 140 பள்ளிகளைச் சேர்ந்த 6,535 மாணவர்கள், 7,166 மாணவிகள் உட்பட 13 ஆயிரத்து 701 பேர் தேர்வு எழுத உள்ளனர். மாவட்டத்தில் 63 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் மாவட்ட கண்காணிப்பாளர்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்வு கண்காணிப்பாளர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உட்பட 10 உயர் அலுவலர்களும், 6 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களும், 63 தேர்வு மைய கண்காணிப்பாளும், 67 துறை அலுவலர்களும், 15 வழித்தட அலுவலர்களும் 15 பறக்கும் படை அலுவலர்கள், 110 ஸ்குவடு(Squad) அலுவலர்களும், 1080 அரை கண்காணிப்பாளர்கள், 150 சொல்வதை எழுதும் ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும், வாணியம்பாடி, புதூர், கண்கார்டியா அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையத்தில் இன்று மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வந்திருந்தனர். அப்போது மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக தேர்வு எழுத ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது ஒரு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை மாணவர்களுக்கு தேர்வு நன்றாக எழுத வேண்டும் என கூறிக் கொண்டிருந்த நிலையில் காலில் சற்றென்று விழுந்த மாணவன் தேர்வு எழுத ஆசீர்வாதம் செய்யுங்கள் என கூறிய சம்பவம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

