ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு கத்திகுத்து: சிவகங்கையில் பயங்கரம்

கத்திக்குத்தில் காயமடைந்த பெண், தற்போது சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 3, 2026 at 8:07 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சிவகங்கை: அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து பெண்ணை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கடம்பங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுதா (36). கணவர் உயிரிழந்த நிலையில், தனது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இதற்கிடையே, சாலைக்கிராமம் ஆனந்தூர் அருகே புக்குளத்தை சேர்ந்த சுபாஷ் (30) என்பவரை சுதா திருமணம் செய்ததாகவும், பின்னர் அவரது நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் சுபாஷிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தாயாரை சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த சுதா, பிப்.26 முதல் அவருடன் தங்கி உதவியாக இருந்து வந்துள்ளார். அந்த வகையில் நேற்று முன் தினமும் (மார்ச் 1) சுதா தனது தாயுடன் துணைக்கு மருத்துவமனையில் தங்கியுள்ளார்.

அதையறிந்து மருத்துவமனைக்கு வந்த சுபாஷ் சுதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல், பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியுள்ளது. அதனால், ஆத்திரத்தில் மருத்துவமனையை விட்டு வெளியே சென்ற சுபாஷ், அருகில் இருந்த கடையில் கத்தி ஒன்றை வாங்கி, அதனை போர்வைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு மீண்டும் மருத்துவமனைக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபர்
கைது செய்யப்பட்ட நபர் (ETV Bharat Tamil Nadu)

கோபத்துடன் நுழைந்த சுபாஷை பாதுகாப்புப் பணியாளர்கள் தடுத்தபோது, “போர்வையை கொடுத்துவிட்டு வருகிறேன்” எனக் கூறிவிட்டு உள்ளே சென்ற அவர், திடீரென கத்தியால் சுதாவை குத்தியுள்ளார். அப்போது, அருகில் இருந்தவர்கள் விரட்டிய நிலையில், சுபாஷ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

அதில் காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சுதாவை மீட்ட மருத்துவமனை பணியாளர்கள், அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தொடர்ந்து, சுதாவுக்கு மருத்துவர்கள் உடனடி சிகிச்சை அளித்தனர். தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: கத்தி முனையில் நகை வியாபாரியிடம் கொள்ளை; முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகங்கை நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சுபாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அரசு மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. மேலும், நுழைவாயில்களில் கடுமையான சோதனை, கூடுதல் காவலர்கள் நியமனம், 24 மணி நேரக் கண்காணிப்பு, CCTV வசதிகள் மேம்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் அவசரமாக எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.