ரயில் விபத்தில் துணை ராணுவ வீரர் உயிரிழப்பு; 21 குண்டுகள் முழங்க மரியாதை!
துணை ராணுவ டிஎஸ்பி நித்தியானந்தன் மற்றும் இன்ஸ்பெக்டர் ராமுலோ தலைமையில் 16 ராணுவ 77 பட்டாலியன் பிரிவை சேர்ந்தவர்கள் உயிரிழந்த அதியமான் உடலுக்கு தேசிய கொடி போர்த்தி 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.

Published : November 9, 2025 at 11:06 PM IST
திருப்பத்தூர்: ஆந்திரா மாநிலம், விஜயவாடா ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த திருப்பத்தூர் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த துணை ராணுவ வீரருக்கு 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அதியமான். இவர், கடந்த 2004 ஆம் ஆண்டு துணை ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி வசந்தி என்ற மனைவி மற்றும் கார்குழலி, தாமரைச்செல்வன் என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
அதியமான் துணை ராணுவத்தில் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் மணிப்பூரில் இருந்து அவருடைய சொந்த ஊரான வாணியம்பாடி நோக்கி புறப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் ஆந்திரா மாநிலம், விஜயவாடா ரயில் நிலையத்தில் இறங்கி மீண்டும் ஏறும் போது தவறி கீழே விழுந்ததால் படுகாயம் அடைந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ரயில்வே காவல் துறையினர் உடனே அவரை மீட்டு விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அதியமான் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து இறப்பு குறித்து அதியமானின் மனைவி வசந்திக்கு ரயில்வே காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.
இதை கேட்டு அதியமான் மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். பின்னர் உடனடியாக அவர்கள் விஜயவாடாவிற்கு விரைந்து சென்று அதியமான் உயிரிழந்ததை உறுதி செய்தனர். இதன் பின்னர், அங்கிருந்து சொந்த ஊரான வாணியம்பாடிக்கு அதியமானின் சடலத்தை உறவினர்கள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து இன்று அதியமான் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதன் பிறகு மேட்டுப்பாளையம் பாலாற்றங்கரையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக துணை ராணுவ டிஎஸ்பி நித்தியானந்தன் மற்றும் இன்ஸ்பெக்டர் ராமுலோ தலைமையில் 16 ராணுவ 77 பட்டாலியன் SRPF பிரிவை சேர்ந்தவர்கள் உயிரிழந்த துணை ராணுவ வீரரான அதியமான் உடலுக்கு தேசிய கொடி போர்த்தி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.

