ETV Bharat / state

அரசு சார்பில் விஜயகாந்த்திற்கு மணிமண்டபம் - தேமுதிக மாநாட்டில் தீர்மானம்

வெகு பிரம்மாண்டமாக நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தேமுதிக பொதுக்கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 10, 2026 at 11:25 AM IST

2 Min Read
Choose ETV Bharat

கடலூர்: தமிழக அரசு, அரசுக்குச் சொந்தமான ஒரு பொது இடத்தில் விஜயகாந்திற்கு ‘மணிமண்டபம்’ அமைத்துத் தர வேண்டும் என தேமுதிக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், வருகிற மார்ச் மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அனைத்துக் கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான தேமுதிக இதுவரை கூட்டணி தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததை போன்று கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நேற்று (ஜன 10) தேமுதிக மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் முழு விவரம் வருமாறு:-

  1. 2026 ஆம் ஆண்டு அமையவிருக்கும் ஆட்சி, மக்களின் நலன் மற்றும் எதிர்கால தலைமுறையின் நம்பிக்கைகளை நிறைவேற்றும் ஆட்சியாக இருக்க வேண்டும்.
  2. சட்டம், ஒழுங்கை சீரமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அனைத்து வகையான போதைப்பொருட்களின் விற்பனையை முழுமையாக ஒழிக்க வேண்டும்.
  3. போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் அதற்கு துணைபுரிவோருக்கு எதிராக கடுமையான தண்டனை மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
  4. தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி உள்ளிட்ட அனைத்து பணியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து, அவர்களின் பணிகளை நிரந்தரப்படுத்தி, சம ஊதியம் மற்றும் நிலுவையில் உள்ள ஊதியங்களை உடனடியாக வழங்கிடவும், எதிர்காலத்தில் எந்தவிதப் போராட்டங்களுக்கும் இடமளிக்காத வகையிலும் நிரந்தரமான தீர்வுகளை அரசு உருவாக்க வேண்டும்.
  5. சாதி, மத அடிப்படையில் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகள் மற்றும் செயல்கள் சனாதனத்திற்கும், சமூக அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது போன்ற கருத்துக்களை முற்றிலுமாக தடுக்கவும், மதரீதியான மோதல்களை உருவாக்குவோர் மீது காவல்துறை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.
  6. மத்திய அரசு கொண்டு வந்த தொழிலாளர் சட்டங்களை திருத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
  7. பொங்கல் பரிசுத் தொகுப்புகள் எந்தவிதமான பாகுபாடும் இன்றி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முறையாகவும், முழுமையாகவும் சென்றடைய வேண்டும்
  8. மகளிர் உரிமைத் தொகை, மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் டேப் போன்றவை அனைவருக்கும் முறையாக சென்றடைய வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்து, விவசாயிகளுக்கு நிரந்தரமான வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் வரப்போகும் அரசு இருக்க வேண்டும்.
  9. விவசாயத்தை ஒரு லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கான திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும். கொள்முதல் செய்யப்படும் கரும்பிற்கு உரிய நியாயமான விலையை தமிழக அரசே நிர்ணயித்து, கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் விளைவிக்கும் நெல்மணிகளை பாதுகாக்க, போதிய கிடங்குகளை அமைக்க வேண்டும்.
  10. விஜயகாந்திற்கு நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருதை வழங்க வேண்டும். தமிழக அரசு, அரசுக்குச் சொந்தமான ஒரு பொது இடத்தில், விஜயகாந்திற்கு ‘மணிமண்டபம்’ அமைத்துத் தர வேண்டும்.

என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.