ரஜினியுடன் உரையாடல்.. விஜயின் 'கப்பு முக்கியம் பிகிலு' வசனம்... சென்னையில் இந்திய அணி கேப்டன் உற்சாகம்!
உலகக் கோப்பை இறுதி போட்டி சுவாரஸ்யமானதாகவும், பதற்றமான போட்டியாகவும் இருந்தது என்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.

Published : November 13, 2025 at 6:29 PM IST
சென்னை: தனியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட விழாவில் பங்கேற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், பல்கலைக்கழகத்தின் உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தது.
இந்நிலையில், சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் அந்நிகழ்ச்சியில் பல்கலைக்கத்தின் வேந்தர் மரியசீனா ஜான்சன், ஹர்மன்ப்ரீத் கவுருக்கு மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் உள் விளையாட்டு அரங்கு திறப்பு விழாவும் மற்றும் இந்திய கிரிக்கெட் பெண்கள் அணி உலகக்கோப்பை வென்றதை கொண்டாடும் வகையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்ருக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஹர்மன்ப்ரீத் கவுர் பல்கலைகழகத்தின் உள் விளையாட்டு அரங்கை திறந்து வைத்தார்.
பின்னர் பல்கலைகழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட நேர்காணல் நிகழ்ச்சியின்போது ஹர்மன்ப்ரீத் கவுரிடம், தமிழ் சினிமாவில் உங்களுக்கு யாரேனும் நடிகர்களை தெரியுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹர்மன்ப்ரீத், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் "நான் தாய்லாந்தில் இருந்தபோது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசியில் தன்னை அழைத்து சுமார் நான்கு நிமிடம் பேசியதுடன், உலகக் கோப்பையை வென்றதற்காக பாராட்டுகளையும் தெரிவித்தார்" என்றார்.
இதையும் படிங்க: |
மேற்கொண்டு உலகக் கோப்பை வென்றது குறித்த தருணத்தை பகிர்ந்து கொண்ட அவர், "உலகக் கோப்பை இறுதி போட்டி சுவாரஸ்யமானதாகவும், பதற்றமான போட்டியாகவும் இருந்தது. ஆனால் உலகக் கோப்பை வென்றது இதயத்திற்கு நெருக்கமானதாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது" என்றார்.
இறுதியில் அவர். பிகில் படத்தில் விஜய் பேசிய 'கப்பு முக்கியம் பிகிலு' என்ற வசனத்தை பேசியபோது மாணவர்களின் கர ஒளியால் அரங்கம் அதிர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

