ETV Bharat / sports

விம்பிள்டன் 2026: சின்னர், சபலென்கா, ஒசாகா, பெகுலா அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தல்

விம்பிள்டன் தொடரின் அடுத்த சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, உலகின் முதல் நிலை வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்காவை எதிர்கொள்ளவுள்ளார்.

அரினா சபலென்கா
அரினா சபலென்கா (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : July 4, 2026 at 2:28 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் 5ஆவது நாளில், முன்னணி நட்சத்திரங்களான ஜானிக் சின்னர், அரினா சபலென்கா, நவோமி ஒசாகா மற்றும் ஜெசிகா பெகுலா ஆகியோர் வெற்றி பெற்று ரவுண்ட் ஆஃப் 16-க்கு முன்னேறியுள்ளனர்.

லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் தற்போதைய சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டத்தில், நடப்பு சாம்பியனும் உலகத் தரம் வரிசையில் முதன்மை வீரருமான இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பியை எதிர்கொண்டார். இப்போட்டியின் தொடக்கம் முதலே முழு ஆதிக்கத்தை செலுத்திய சின்னர், அடுத்தடுத்து புள்ளிகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் ஆட்டநேர முடிவில், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜானிக் சின்னர் 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஜென்சன் புரூக்ஸ்பியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். இந்த சிறப்பான வெற்றியின் மூலம், நடப்பு விம்பிள்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 16 பேர் பங்கேற்கும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கும் சின்னர் தகுதி பெற்று அசத்தியுள்ளார்.

அதேசமயம் மகளிர் ஒற்றையர் பிரிவின் 3ஆவது சுற்று ஆட்டங்களும் ரசிகர்களுக்குப் பெருவிருந்தாக அமைந்தன. இதில் உலகத் தரம் வரிசையில் முன்னிலையில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, முன்னாள் பிரெஞ்சு ஓபன் சாம்பியனான லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோவுடன் பலப்பரீட்சை நடத்தினார். போட்டியின் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய சபலென்கா 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்டாபென்கோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

மற்றொரு விறுவிறுப்பான மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், ஜப்பானின் நட்சத்திர வீராங்கனை நவோமி ஒசாகா, ரஷ்யாவின் தாரியா கசாட்கினாவை எதிர்கொண்டு 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார். அதேபோல், உலகின் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஸ்பெயினின் ஜெசிகா பௌசாஸ் மனிரோவை 6-1, 6-3 என்ற கணக்கில் எளிதாக வீழ்த்தி, நடப்பு விம்பிள்டன் தொடரின் 4-வது சுற்றுக்கு (காலிறுதிக்கு முந்தைய சுற்று) முன்னேறினார்.

இதையும் படிங்க:

இந்த 3ஆவது சுற்று வெற்றிகளின் மூலம், அடுத்த சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, உலகின் முதல்நிலை வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்காவை எதிர்கொள்ளவுள்ளார். உலகின் இரு பெரும் முன்னணி நட்சத்திர வீராங்கனைகள் காலிறுதி வாய்ப்பிற்காக நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் இப்போதே பலமடங்கு அதிகரித்துள்ளது.